சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஆகாஷ் டெலிசன் போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், காவல்துறை மீதான கடும் குற்றச்சாட்டுகளையும் ஏற்படுத்தியது. மார்ச் 8, 2026 அன்று அவர் உயிரிழந்ததிலிருந்து இன்று வரை கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மார்ச்சுவரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது பெற்றோர் ராஜேஷ் கண்ணன் மற்றும் ஆனந்தி ஆகியோர், “குற்றம்சாட்டப்பட்ட போலீசாரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்” என்ற உறுதியான நிலைப்பாட்டில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மானாமதுரை ரயில்வே காலனி பகுதியில் இரு பேரை அரிவாள், பட்டாக்கத்தியால் தாக்கியதாகக் கூறப்பட்ட வழக்கில் ஆகாஷ் டெலிசன் மற்றும் அவரது நண்பர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறியபடி, ஆகாஷ் தப்பிக்க முயன்றபோது மேம்பாலத்திலிருந்து குதித்து வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அதனால் அவரை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மார்ச் 8 அதிகாலையில் அவர் உயிரிழந்தார்.

இந்த விளக்கத்திற்கு ஆகாஷின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகாஷ் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது உடலை பெற்றோர் இதுவரை வாங்காமல் இருந்து வருகின்றனர். 100 நாட்களை கடந்தும் உடலை வாங்க வில்லை என்பதால் கெடு விதிக்கப்பட்டதுடன் போலீசாரே உடலை தகனம் செய்வார்கள் என்றும் கூறப்பட்டது.
இதையும் படிங்க: 100 நாள் நீதிப்போராட்டம் உச்சக்கட்டம்..! போராடிய ஆகாஷின் பெற்றோர், உறவினர்கள் கைது..!
இதைத்தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் 100 நாட்களாக வைக்கப்பட்டிருந்த ஆகாஷின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் முன்னிலையில் மதுரை தத்தனேரி மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆகாஷின் பெற்றோர் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார். பிறகு ஆகாஷ் உடல் அமைதியான முறையில் தகனம் செய்யப்பட்டது. ஆகாஷின் உடலைப் பார்த்து அவரது உறவினர்கள் கதறி துடித்தனர்.
இதையும் படிங்க: "இன்று மாலைக்குள்"..! 100 நாட்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..! நீதிமன்றம் கடைசி கெடு..!!