நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) தந்தை - மகன் இடையே இருந்த மோதல் வெளிப்படையாகத் தெரிந்தது. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது செல்வாக்கை வெற்றிகரமாக நிரூபித்துள்ளார்.
பா.ம.க.வில் ஏற்பட்ட உள்ளக மோதலால் தந்தை ராமதாஸும் மகன் அன்புமணியும் தனித்தனியாக செயல்பட்டனர். அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகளில் போட்டியிட்ட அன்புமணி தரப்பு 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது அன்புமணியின் தனிப்பட்ட செல்வாக்கை தெளிவாகக் காட்டுகிறது.
மறுபுறம், ராமதாஸ் சசிகலாவின் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து ‘அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம்’ பெயரில் 35 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். அன்புமணியின் வெற்றியைத் தடுக்கும் என்று ராமதாஸ் தரப்பு நம்பியது. ஆனால், உண்மை நிலவரம் முற்றிலும் வேறாக இருந்தது.
இதையும் படிங்க: பாமக வேட்பாளர்களை எதிர்த்து களம் இறங்கும் ராமதாஸ்! மகள் ஸ்ரீ காந்தியுடன் அனல் பறக்கும் பிரசாரம்!!

சேலம் மேற்கு தொகுதியில் ராமதாஸ் தரப்பில் போட்டியிட்ட அருள் 10,000 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். அன்புமணியின் மனைவி சவுமியா வெற்றி பெற்ற தர்மபுரியில் ராமதாஸ் தரப்பு வேட்பாளர் சரவணன் வெறும் 1,031 ஓட்டுகளுடன் தோற்றார். மற்ற தொகுதிகளில் பெரும்பாலும் 2,000 ஓட்டுகளுக்கும் குறைவாகவே ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் பெற்றனர்.
தந்தைக்கு எதிராக தேர்தல் களத்தில் குதித்த அன்புமணி, பா.ம.க.வில் தனது செல்வாக்கை முழுமையாக நிரூபித்துள்ளார். இந்தத் தேர்தல் முடிவுகள் பா.ம.க. முழுவதும் அன்புமணி ராமதாஸ் வசம் சென்றுவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளன.
கட்சியின் எதிர்காலம் குறித்து அன்புமணி தரப்பில் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது. ராமதாஸ் - அன்புமணி மோதல் பா.ம.க.வுக்கு பெரும் சவாலாக இருந்தாலும், இந்தத் தேர்தல் முடிவு அன்புமணியின் தலைமையை வலுப்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் பா.ம.க.வின் அடுத்த நகர்வுகள் அன்புமணி மையப்படுத்தப்பட்டே இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கை நழுவிய மாம்பழம்!! சிலிண்டர், குக்கர், பச்சை மிளகாய் சின்னங்களில் போட்டியிடும் ராமதாஸ் தரப்பு!