இயக்குனர் சிகரம் பாரதிராஜா மறைவை ஒட்டி தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் படத் திரையுலகில் அழியாத தடம் பதித்தவர் என்ற புகழாரம் சூட்டினார். இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவர் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்த பாரதிராஜா, 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்பு ரோஜாக்கள்' உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை இயக்கினார்.
அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படங்களை வெளிப்புறப் படப்பிடிப்புப் பகுதிகளுக்குக் கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைப் படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர்.
இதையும் படிங்க: தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்பு! ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

தமிழ் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தைப் பதித்த பாரதிராஜா என்று காலமானார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
"புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மறைவால் மிகுந்த துயரமடைந்தேன். கிராமிய வாழ்வையும் மனித உணர்வுகளையும் உண்மைத் தன்மையுடன் வெளிப்படுத்திய அவரது படைப்புகள் தமிழ் திரைப்பட உலகில் அழியாத தடம் பதித்துள்ளன என்று கூறினார். அவரின் குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இரங்கல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிறு பட தயாரிப்பாளர்களின் குரல் ஒடுங்கியது! கே. ராஜன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!