சென்னை ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக அரசின் தேர்தல் கால 'டோக்கன்' விநியோகத்தைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு திமுக தரப்பிலிருந்து ரூ. 8,000 மதிப்பிலான டோக்கன்கள் வழங்கப்படுவதாகக் கிளம்பியுள்ள புகார்களை முன்வைத்து சீமான் பேசுகையில். திமுகவினர் வழங்கும் 8 ஆயிரம் ரூபாய் டோக்கனை வைத்து எதை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்கிறார்களே, அந்த டோக்கனைத் தந்தால் எனக்கு முதலமைச்சர் பதவியைத் தருவார்களா? என்று கிண்டலாகக் கேள்வி எழுப்பினார். மக்களின் வாக்குகளைப் பணத்தின் மூலமும், டோக்கன் மூலமும் விலைக்கு வாங்க நினைப்பது ஜனநாயகத்திற்கு இழைக்கப்படும் துரோகம் என அவர் சாடினார்.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி இலவசங்களை அறிவிப்பதைக் குறிப்பிட்ட அவர்: இலவசங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றுவது ஒரு நாட்டின் வளர்ச்சி அல்ல; அது அந்த நாட்டின் வீழ்ச்சியையே காட்டும். இலவச அரிசியும், பணமும் கொடுப்பதற்குப் பதிலாக, மக்களுக்குத் தரமான கல்வியையும், வேலைவாய்ப்பையும் கொடுங்கள் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: இலவசம் தேசத்தை நாசமாக்கிவிட்டது! நாமக்கல்லில் திராவிட கட்சிகளை வறுத்தெடுத்த சீமான்!
ஆலந்தூர் தொகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து நெரிசல் குறித்துப் பேசிய சீமான், ஐம்பது ஆண்டுகளாக ஆண்ட கட்சிகள் செய்யாததை, அதிகாரத்தைக் கொடுத்தால் நாம் தமிழர் செய்து காட்டும். இந்த முறை மாற்றத்திற்காக மெழுகுவர்த்தி சின்னத்திற்கு வாக்களியுங்கள் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
திமுகவின் ஸ்டாலின் தொடரட்டும் என்ற தேர்தல் முழக்கத்தைச் சாடிய அவர், தமிழகம் சுடுகாடாக மாறுவதற்கா ஸ்டாலின் தொடர வேண்டும்? மீனவர் படுகொலை, விவசாயிகள் தற்கொலை, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு - இதுதான் ஸ்டாலின் ஆட்சியின் சாதனையா? என ஆக்ரோஷமாக வினவினார்.
சீமானின் இந்தப் பேச்சு ஆலந்தூரில் கூடியிருந்த இளைஞர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 2000-ஆ? 2500-ஆ?" - திமுக, அதிமுக ஏல அரசியலைக் கிண்டல் செய்த சீமான்!