சென்னை அண்ணாநகர் டவர் பூங்கா அருகே 59 வயதான கலாவதி என்ற பெண் கடந்த 23ஆம் தேதி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, திடீரென அங்கு மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் அவர் விழுந்ததாகவும், அப்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கலாவதியின் மகள் அளித்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், முதற்கட்ட விசாரணையைத் தொடங்கி தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இந்த சம்பவம் தொடர்பாக, மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் யார், அந்தப் பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் யார் என்பது உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சம்மன் வழங்கும் பணியிலும் அண்ணாநகர் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், முதற்கட்டமாக மின்வாரிய உதவிப் பொறியாளர் மற்றும் மாநகராட்சி உதவிப் பொறியாளர் ஆகியோருக்கு போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர். அவர்கள் நேரில் ஆஜராகி, இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால் பணிகள் எப்போது மேற்கொள்ளப்பட்டன, பள்ளம் ஏன் மூடப்படவில்லை, அந்தப் பகுதியில் மின்சார வயர் அல்லது மின் இணைப்பில் ஏதேனும் குறைபாடு இருந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, கலாவதியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை இதுவரை போலீசாருக்கு கிடைக்கவில்லை. முதற்கட்ட போலீஸ் விசாரணையில், பள்ளத்தில் விழுந்தபோது மின்சாரம் தாக்கியதன் காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே வழக்கில் உரிய பிரிவுகள் மாற்றப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பான பிரிவின் கீழ் வழக்கு மாற்றப்படும் என அண்ணாநகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், கலாவதியின் உயிரிழப்புக்கு யார் காரணம், எந்தத் தரப்பில் அலட்சியம் ஏற்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அண்ணாநகர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை..! சென்னைக்கு வார் ரூம் ரெடி... அதிகாரிகள் நியமனம்..!!