தமிழக அரசியலில் தற்போது பெரும் கவனம் பெற்றுள்ள தவெக தலைமையிலான கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டணியின் முக்கிய கூட்டத்தில் கூட்டணிக்கு அதிகாரப்பூர்வ பெயர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, ஆட்சியமைத்த பிறகு தொடர்ந்து நடைபெற்று வரும் கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பு முயற்சிகளின் உச்சக்கட்டமாக பார்க்கப்படுகிறது.
2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், விசிக, இமுலீக், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட முன்னாள் திமுக கூட்டாளிகள் ஆதரவு அளித்து ஆட்சி அமைக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் நீண்ட காலத்திற்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியில் பங்கு பெறும் வாய்ப்பு கிட்டியது. ஆரம்பத்தில் இது வெறும் ஆதரவு ஒப்பந்தமாகவே பார்க்கப்பட்டாலும், படிப்படியாக இதை நீண்டகால அரசியல் கூட்டணியாக உருமாற்றும் முயற்சிகள் தொடங்கின.

ஜூலை மாதம் முதல் முறையாக நடைபெற்ற ஆதரவு கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணிக்கு ஒருங்கிணைப்புக் குழு, பொதுவான குறைந்தபட்ச நிகழ்ச்சி நிரல் மற்றும் அதிகாரப்பூர்வ பெயர் தேவை என்ற மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அப்போது மாணிக்கம் தாகூர் இந்தக் கூட்டத்தை நல்ல தொடக்கமாக வர்ணித்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது செப்டம்பர் 9ஆம் தேதி இரண்டாவது முக்கிய கூட்டம் நடைபெறவுள்ளது. சட்டசபைக் கூட்டத்தொடர் செப்டம்பர் 8ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த நாளே இந்தக் கூட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தக் கூட்டத்திற்கு சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு தவெக அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர். ஏற்கனவே காங்கிரஸ், விசிக, இமுலீக் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியில் பங்கேற்று வரும் நிலையில், இடதுசாரிகளையும் மதிமுகவையும் இன்னும் நெருக்கமாக இணைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. கூட்டணியின் பெயர் அறிவிப்புடன், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உத்திகளும் இங்கு விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பா.சிதம்பரத்திற்கு அரசு பதவி கொடுத்த முதல்வர் விஜய்? கோபித்துக் கொண்ட ராகுல்காந்தி! காங்கிரசில் சர்ச்சை!
உள்ளாட்சித் தேர்தலை நோக்கி காய் நகர்த்தும் நோக்கத்துடன் இந்தக் கூட்டம் அமைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மாணிக்கம் தாகூர், இந்தக் கூட்டணியை வெறும் தற்காலிக ஏற்பாடாக அல்லாமல், வரும் 2029 மக்களவைத் தேர்தல் வரை நீடிக்கும் வலுவான கூட்டணியாக மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி, சமூக நீதி, மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி இந்தக் கூட்டணி செயல்பட வேண்டும் என்பதே அவரது வலியுறுத்தல். இதற்கிடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்தாலும், அவற்றை உரையாடல் மூலம் தீர்த்துக் கொண்டு ஒற்றுமையைப் பேணுவதில் காங்கிரஸ் தலைமை கவனம் செலுத்தி வருகிறது.தவெக தலைமையிலான இந்தக் கூட்டணிக்கு பெயர் வைப்பது, அதை மக்கள் மத்தியில் தெளிவாக அடையாளப்படுத்தும் முயற்சியாகும். இதுவரை பெயரில்லாமல் இயங்கி வந்த இந்த அமைப்பு, அதிகாரப்பூர்வ பெயர் பெற்றவுடன் ஒருங்கிணைப்புக் குழு மூலம் இன்னும் முறையாக செயல்படும்.
இதையும் படிங்க: தோழமை கட்சிகள் கூட்டம்..! “காங்கிரஸுக்கு TVK அதிகாரப்பூர்வ அழைப்பு"..! சத்தியமூர்த்தி பவனில் அமைச்சர்கள்..!!