கேரள முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையைக் கண்டித்து, சென்னை பல்லாவரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்.) சார்பில் இன்று மாலை பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.பி.எம். தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான தோழர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராகத் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தினர்.
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் திருவனந்தபுரம் மற்றும் கண்ணூரில் உள்ள இல்லங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல்வேறு மாநிலங்களில் புதிய அரசியல் சமன்பாடுகள் மாறி வரும் நிலையில், கேரளாவின் முக்கிய இடதுசாரித் தலைவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தச் சோதனை நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
தாம்பரம் அடுத்த பல்லாவரத்தில் நடைபெற்ற இந்த அவசரக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சி.பி.எம். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீம்ராவ் உள்ளிட்ட முக்கியப் பாசறை நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்து உரையாற்றினர். அப்போது பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. பீம்ராவ், "மத்தியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அரசு, தங்களுக்கு எதிராகச் செயல்படும் மாநிலத் தலைவர்களையும், மாற்றுச் சித்தாந்தம் கொண்டவர்களையும் முடக்குவதற்காகத் தன்னாட்சி அதிகாரம் கொண்ட புலனாய்வு அமைப்புகளைத் தவறான முறையில் பயன்படுத்தி வருகிறது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல், இதுபோன்ற சோதனைகள் மூலம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது" என்று கடுமையாக விமரிசித்தார்.
இதையும் படிங்க: கேரளாவில் உயருகிறது பால் விலை..!! ஜூன் 1 முதல் அமல்..!! ஒரு லிட்டருக்கு இவ்ளோவா..!!
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், கேரள அரசியல் சூழலில் நிலவும் காங்கிரஸ் மற்றும் பாஜக-வின் ரகசியக் கூட்டணி குறித்தும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. "இந்த அமலாக்கத்துறை சோதனையின் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சியுடன் காங்கிரஸ் கட்சியும் திரைமறைவில் கைகோர்த்துள்ளது. இது முற்றிலும் இடதுசாரி அரசை வீழ்த்துவதற்காக நடத்தப்படும் ஒரு கூட்டுச் சதியாகும். குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் கேரளாவில் பாஜக-வின் அரசியல் நோக்கத்திற்குத் துணை போகும் வகையில் அமைந்துள்ளது" என்று மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் சாடினார்.
பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள், மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் போக்கைக் கண்டித்தும் கைகளில் பதாகைகளை ஏந்தி வான் அதிரக் கோஷங்களை எழுப்பினர். புதிய தவெக அரசு பொறுப்பேற்றுப் பல்வேறு நிர்வாகச் சீர்திருத்தங்களைச் செய்து வரும் வேளையில், அண்டை மாநில முன்னாள் முதல்வருக்கு ஆதரவாகச் சென்னையில் இடதுசாரிகள் நடத்தியுள்ள இந்த உக்கிரமான போராட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனிப்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் 26ம் தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!