ஆந்திர மாநில காவல்துறை மற்றும் மீன்வளத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட காசிமேடு மீனவர்களின் 7 விசைப் படகுகளை விடுவிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள த.வெ.க. அரசை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 800 விசைப் படகுகளும், 2000 ஃபைபர் படகுகளும் தங்குதளமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்கள்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கான மீன் இறைச்சி தேவையை இவர்கள்தான் பூர்த்தி செய்து வருகின்றனர். இங்கு பிடிக்கப்படும் மீன்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு, நமது நாட்டிற்கு அந்நிய செலவாணியை ஈட்டித் தருகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 30,000 வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் காசிமேடு மீனவர்களின் மீன்களை நம்பியுள்ளனர்.

இந்நிலையில், ஆந்திர மாநில அரசு தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆந்திர கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தொழில் செய்யக்கூடாது என்று கூறி, 17.6.2026 அன்று காசிமேடு துறைமுகத்தைச் சேர்ந்த 7 விசைப் படகுகளை பறிமுதல் செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இன்றுவரை அந்த 7 விசைப் படகுகளை ஆந்திர அரசு விடுவிக்கவில்லை.
இதையும் படிங்க: பழனி நில மோசடி விவகாரம்..! சிபிஐ விசாரணை தேவை... அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!
காசிமேடு மீனவர்கள், த.வெ.க. அரசு மற்றும் தமிழக மீன்வளத் துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை தமிழக அரசு, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காசிமேடு மீனவர்கள் புகார் தெரிவிப்பதாக கூறியுள்ளார். எனவே, ஆந்திர அரசு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட காசிமேடு மீனவர்களின் 7 விசைப் படகுகளை விடுவிக்க த.வெ.க. அரசின் முதலமைச்சர் உடனடியாக முயற்சிக்க வேண்டும் என்றும் இனியும் காசிமேடு மீனவர்களை, ஆந்திர அரசு அதிகாரிகளால் துன்புறுத்தப்படாமல் இருப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவை விட்டு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள்... தவெகவிற்கு செக் வைத்த அதிமுக மாஜி...!