தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை முடிந்து அரசுப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மேலும் தனியார் பள்ளிகள் ஜூன் 5-ம் தேதி திறக்கப்பட உள்ளன. இதனால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் அங்கிருந்து தாம் பணி புரியும் மாவட்டங்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். ரயில்களில் முன்பதிவு ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில் பெரும்பாலானோர் தத்கால் மூலம் பயணச்சீட்டு பெற முயற்சிக்கும் முடிவில் இருக்கின்றனர். மேலும் சிலர் தனியார் பேருந்துகளையும் நாடுகின்றனர்.

பொதுமக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், அவர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் ஏற்கனவே அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 2,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. அதேபோல், தனியார் ஆம்னி பேருந்துகளும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: தேச முன்னேற்றத்திற்கு அளப்பரிய பங்களிப்பை செய்துள்ள தெலங்கானா! மாநில தினத்தை ஒட்டி பிரதமர் வாழ்த்து

கோடை விடுமுறை முடிந்து ஏராளமானோர் ஊர் திரும்பும் சூழலை பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாலும், ரயில்களில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்கள் காலியாகி விட்டதாலும், விமானங்களில் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். அதன்படி தூத்துக்குடி, மதுரை, கோவை மற்றும் திருவனந்தபுரம், கொச்சி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை வரும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியுள்ளது. இதனால், தற்போது பல்வேறு ஊர்களில் இருந்து சென்னை வரும் விமானங்களின் பயண கட்டணங்களின் விலை 5 மடங்கு வரை அதிரடியாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பையொட்டி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை விமானங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மதுரை - சென்னை செல்ல வழக்கமான கட்டணம் ரூ.4,542. ஆனால் இன்றைய கட்டணம் ரூ.18,127 வசூலிக்கப்படுகிறது. அதேபோல் தூத்துக்குடி - சென்னை செல்ல வழக்கமான கட்டணம் ரூ.4,214. ஆனால் இன்றைய கட்டணம் ரூ.17,401 ஆக வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டண உயர்வால் பொதுமக்கள், எதன் மூலம் ஊர் திரும்புவது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வங்கி ATM களில் பணம் எடுத்தால் இது நடக்கும்.. இந்தியன் பேங்க் அறிவிப்பால் அதிர்ச்சி..!