தமிழகத்தில் தற்பொழுது பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் ஆயுட்காலம் இன்னும் மூன்று ஆண்டுகள் தான் என்று நான் சொல்லவில்லை, இன்னும் மூன்று மாதங்களிலே கூட முதலமைச்சர் ஜோசப் விஜய் வீட்டுக்குப் போனாலும் போகலாம் என அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ஆர்.பி.உதயகுமார் மிகக் கடுமையான அரசியல் குண்டொன்றைத் தூக்கிப் போட்டுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற அதிமுகவின் ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியுரை ஆற்றிய அவர், தற்போதைய தவெக ஆட்சியில் அரங்கேறி வரும் குளறுபடிகளை அடுக்கடுக்காகப் பட்டியலிட்டார். அப்போது பேசிய அவர், "ஆட்சியை இழந்துவிட்டோமே என்று அதிமுகவினர் யாரும் எக்காரணம் கொண்டும் சோர்ந்து போகவோ, இன்னும் ஐந்து வருடங்கள் இந்த சினிமா பாணி ஆட்சியை எப்படி சகித்துக் கொள்ளப் போகிறோம் என்று கவலைப்படவோ தேவையில்லை. நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி ஐயா அவர்கள் இருக்கிறார். நான் சொல்வதைத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். தற்பொழுது 2026ஆம் ஆண்டு நடந்து கொண்டிருக்கிறது, வரும் 2029ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த நாட்டுக்கும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறை அமலுக்கு வரப்போகிறது" என்று சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து முதலமைச்சர் விஜய்யை நோக்கித் தனது சாட்டையடி விமரிசனங்களைத் திருப்பிய ஆர்.பி.உதயகுமார், "இந்த தவெக அரசுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் தான் ஆயுள் காலம் என்று நான் வரையறுத்துச் சொல்லவில்லை. ஏன், இன்னும் ஒரு மூன்று மாதங்களிலே கூட முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது பதவியை இழந்துவிட்டு வீட்டுக்குப் போனாலும் போகலாம். ஏனென்றால், கரூரில் நடைபெற்ற அந்தப் பயங்கரமான கூட்ட நெரிசல் விவகாரத்தின் சிபிஐ வழக்கின் கத்தி, தற்பொழுது முதலமைச்சரின் தலைக்கு மேல்தான் தொங்கிக்கொண்டிருக்கிறது. அந்த வழக்கின் தீர்ப்பு எந்த நேரத்திலும் வரலாம்" என அதிரடியாகக் குறிப்பிட்டார். சிபிஐ விசாரணை வளையத்தில் கரூர் சம்பவம் இருக்கும் சூழலில், தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது என்றும், 2029 நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழக சட்டமன்றத்திற்கும் சேர்த்துத் தேர்தல் வரும் என்றும் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது காட்டுத்தீயாய் பரவி பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!
இதையும் படிங்க: தஞ்சை நெல் மூட்டை விபத்தில் பெண் பலி! முதல்வர் விஜய் 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு!