விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள குரண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுரு (52). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காரியாபட்டி ஒன்றிய முன்னாள் துணைச் செயலாளராக இருந்து வந்துள்ளார். அப்பகுதியில் நடைபெற்று வந்த சமூக விரோத செயல்கள் குறித்து காவல்துறைக்கு தொடர்ந்து தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி விஜயகுருவின் உறவினரான சக்திவேல் என்பவர் சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த உயிரிழப்புக்கு விஜயகுருதான் காரணம் என சந்தேகித்து சக்திவேலின் உறவினர்கள் தொடர்ந்து தகராறு செய்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை விஜயகுரு குரண்டி கண்மாய் பகுதியில் காலைக்கடன் கழிக்க சென்றபோது, முள் புதர்களில் மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென அவரின் கண்களில் மிளகாய் பொடி தூவி அருவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. முகம் சிதைந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் விஜயகுரு உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க: “திருமாவளவனை முதல்வராக்குங்க...” - திராவிட கட்சிகளுக்கு செக் வைத்த சிந்தனை செல்வன்...!
பின்னர் அப்பகுதிக்கு சென்ற உறவினர்கள் ஒருவர் வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக ஊர்மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொதுமக்கள் விஜயகுரு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆவியூர் போலீசார் மற்றும் அருப்புக்கோட்டை டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயகுருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் நேரில் சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குரண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விஜய்க்கு ஆதரவா..? திருமா. நாளை முடிவு..! கூடுகிறது உயர்நிலை குழு கூட்டம்..!!