சென்னை மாதவரம் பகுதியில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக மாதவரம் காவல் நிலைய போலீசார் நடத்திய தீவிர நடவடிக்கையில் பரபரப்பான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாதவரம் பொன்னியம்மன் மேடு அகத்தியர் நகர் அருகில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய சிறுவர்களை பயன்படுத்திய இரு பெரியவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மாதவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காதர் மீரா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, அப்பகுதியில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக உதவி கமிஷனர் சிவகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. அப்போது, அகத்தியர் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு சிறுவர்கள் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்தனர். அவர்களை மடக்கி சோதனை செய்தபோது, அவர்களிடம் அரை கிலோ கஞ்சா பிடிபட்டது.

விசாரணையில் அந்த சிறுவர்கள் 17 வயதுடையவர்கள் என்பதும், புழல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கஞ்சாவை விற்பனை செய்ய கொண்டு வந்ததாக ஒப்புக்கொண்டனர். மேலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டதில், கஞ்சாவை வழங்கிய முக்கிய நபர்கள் மாதவரம் அருகில் பால் பண்ணை, மாத்தூர், பாலசுப்பிரமணியம் நகரைச் சேர்ந்த காயிலாங்கடை வைத்திருக்கும் ராமமூர்த்தி மற்றும் திருமலை சேர்ந்த கதிர்வேல் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டது.
இதையும் படிங்க: போதைப்பொருளுக்கு எதிராக விஜய் அரசு Action Mode! 100 கிலோ கஞ்சா பறிமுதல்..!!
போலீசார் அவர்களது இடங்களில் சோதனை நடத்தியபோது, பழைய இரும்புக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 கிலோ கஞ்சா மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்டது. ராமமூர்த்தி மற்றும் கதிர்வேல் ஆகியோர் ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சாவை கொள்முதல் செய்து, அதிக லாபத்துக்கு விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. சிறுவர்களை இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுத்தியதும் உறுதியானது. போலீசார் மொத்தம் 21 கிலோ கஞ்சா, செல்போன்கள் மற்றும் இரு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இரு சிறுவர்களை சிறார் சிறையிலும், ராமமூர்த்தி மற்றும் கதிர்வேல் ஆகிய இருவரையும் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: வீட்டிற்குள் தவெக ஆதரவாளர் செய்த பகீர் காரியம்... ஸ்டன் ஆன சென்னை... தட்டித்தூக்கிய போலீஸ்..!!