தமிழகத்தில் ஆட்சியமைப்பை சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஆளுநர் மாளிகை வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ள புதிய தகவல்கள் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சட்டமன்றத்தில் தேவையான பெரும்பான்மை ஆதரவை உறுதிப்படுத்திய பின்னரே முதலமைச்சராக பதவியேற்க அழைப்பு விடுக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் தெளிவான பெரும்பான்மை இல்லாததால், ஆட்சியமைப்பைச் சுற்றி தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், ஆளுநர் இதுவரை அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கவில்லை.
இந்த நிலையில், தமிழகத்தில் நிலையான அரசு அமைய வேண்டும் என்பதில் ஆளுநர் உறுதியாக இருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஆதரவு தரும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை முழுமையாக உறுதி செய்யப்பட்ட பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எதற்காக விஜய்க்கு ஆதரவு..? விமர்சனங்களை உடைத்த காங்கிரஸ் MLA ராஜேஷ்..!!

அரசியல் குதிரைப்பேரம், கட்சி தாவல் மற்றும் நிலையற்ற அரசியல் சூழ்நிலைகளை தவிர்க்கும் நோக்கத்திலேயே இந்த எச்சரிக்கை அணுகுமுறை பின்பற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால், ஆதரவு எம்எல்ஏக்களின் எழுத்து மூலம் ஒப்புதல் மற்றும் சட்ட ரீதியான உறுதிப்படுத்தல்களை கவனமாக பரிசீலித்த பிறகே விஜய்க்கு பதவியேற்பு அழைப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், விஜய் ஏற்கனவே இரு முறை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். மேலும், சட்ட நிபுணர்களுடன் தொடர்ந்து ஆலோசனையும் நடத்தி வருகிறார். இதனால் அடுத்த சில நாட்களில் தமிழக அரசியலில் முக்கிய திருப்பங்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மறுபுறம், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பிரபலங்கள் விஜய்க்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில், ஆளுநரின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதே தற்போது தமிழக அரசியலின் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: த.வெ.க. ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் சிக்கல்!! சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசனை!