சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக நாளை (ஜூன் 10) திருநெல்வேலி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (ஜூன் 9) திருநெல்வேலி, கோவை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். ஜூன் 11-ம் தேதி திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் 12-ம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 14 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்க போகும் கனமழை! குடை எடுத்துட்டு போங்க! வெதர் அப்டேட்!

தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யும் சூழல் இருப்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் மண் சரிவு, பாறை உருளல் போன்ற அபாயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சாலை போக்குவரத்து பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதால், பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வானிலை மையத்தின் இந்த அறிவிப்பால் தென் தமிழக மக்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மழை நீர் தேக்கம், வெள்ள அபாயம் உள்ளிட்ட பிரச்னைகளை தவிர்க்க அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என்பதால், மக்கள் உஷாராக இருக்குமாறு வானிலை ஆய்வாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: அரபிக்கடலின் மேல் உருவான வளிமண்டல சுழற்சி! 16 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! வானிலை அலர்ட்!