தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் பல ஆண்டுகளாக சமூகத்தில் பெரும் பிரச்சனையாக உள்ளன. பெரும்பாலும் சாதி, மதம், குடும்ப மானம் போன்றவற்றை முன்னிறுத்தி இந்த வன்முறை நிகழ்த்தப்படுகிறது. இந்த பின்னணியில், கவின் என்ற இளைஞரின் ஆணவப் படுகொலை விவகாரம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவின்குமார். இவர் சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், விடுமுறைக்குச் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது, தனது தாத்தாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நெல்லை கேடிசி நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிகிறது.
சிகிச்சை முடிந்து, சொந்த ஊருக்குச் செல்வதற்காக இருவரும் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது, அவர்களை வழிமறித்த இளைஞர் அரிவாளை எடுத்து கவின்குமாரை வெட்ட துணிந்துள்ளார். அவரிடம் இருந்து தப்ப முயன்ற கவின், உயிரை கையில் பிடித்து ஓடியுள்ளார். இருப்பினும் கவினை அந்த இளைஞர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.
இதையும் படிங்க: என் மகன் எதுக்கும் சலிச்சவன் இல்ல..! ஆணவ படுகொலைக்கு நீதி கிடைக்கணும்! கதறும் தந்தை..!

இதை அடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தது சுர்ஜித் என்ற இளைஞர் கவின்குமாரை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. தன் சகோதரி உடன் நெருங்கி பழகியதால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாகவும் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவ்வாறு செய்ததாகவும் அந்த இளைஞர் சுர்ஜித் போலீசில் சரணடைந்து வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
கவினின் கொலைக்கு பெண்ணின் பெற்றோர்கள் மறைமுகமாக தூண்டுதலாக இருந்ததாகவும், அவர்களது ஆதரவு இல்லாமல் இந்தக் கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கவினின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், பெண்ணின் பெற்றோரையும் கைது செய்ய வேண்டும் என்றும், அவர்கள் காவல்துறையில் பணியாற்றுபவர்களாக இருப்பதால் அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் இந்த வழக்கில் தங்கள் மகன் சுர்ஜித்துக்கு தூண்டுதலாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அஜித்குமார் கொலை வழக்கு.. தீவிரமாகும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..!!