புதுச்சேரி: விஜய்யின் தவெக பொதுக்கூட்டத்தில் இன்று யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்வு நடந்தது – பாதுகாப்புப் பணியில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நூற்றுக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் கடுமையாக அதட்டினார்.
“நான் என்ன செய்யணும்னு நீங்க சொல்லாதீங்க… உங்களால்தான் கரூரில் பலர் இறந்தாங்க!” என்று அனல் பறக்கும் வார்த்தைகளால் பேசிய வீடியோ, சில நிமிடங்களில் இணையத்தில் வைரலாகி, இஷா சிங்கை “லேடி சிங்கம்” என்று கொண்டாட வைத்துவிட்டது.
கரூர் தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த பிறகு, புதுச்சேரியில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. பாஸ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கூட்டத்தில் குறைவான கூட்டம் இருந்ததால், புஸ்ஸி ஆனந்த் பாஸ் இல்லாத சில தொண்டர்களை உள்ளே அனுமதிக்க முயன்றார்.
இதையும் படிங்க: டெல்லி கார் வெடிப்பு!! நீளும் சதிவலை!! காஷ்மீர் வனப்பகுதியில் என்ஐஏ தீவிர சோதனை!!

உடனே அங்கு பாதுகாப்புப் பொறுப்பில் இருந்த எஸ்எஸ்பி இஷா சிங் தடுத்து நிறுத்தி, “விதிமுறையை மீற முடியாது… உங்களால்தான் மக்கள் இறந்திருக்காங்க!” என்று கடுமையாக எச்சரித்தார். அந்தக் காட்சி வீடியோவாக பதிவாகி, சமூக வலைதளங்களில் புயலாகப் பரவியது.
யார் இந்த இஷா சிங்?
மகாராஷ்டிராவைச் சேர்ந்த இஷா சிங், தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தொடங்கினார். விஷவாயு தாக்கி இறந்த மலம் அள்ளும் தொழிலாளர்களின் மனைவிகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு பெற்றுக் கொடுத்து பெயர் பெற்றார்.

“சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் வேண்டும்” என்ற எண்ணத்தில் 2020-ல் யுபிஎஸ்சி தேர்வில் 191-வது ரேங்க் பெற்று ஐபிஎஸ் ஆனார். புதுச்சேரியில் லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்பியாகப் பணியாற்றி, தற்போது எஸ்எஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
பெண்கள் உரிமை, சமூக நீதி என்று எப்போதும் முன்னிற்கும் இஷா சிங், இன்று தவெக கூட்டத்தில் கடமையை மட்டுமே பார்த்து, கட்சி நிர்வாகி என்றும் பார்க்காமல் கண்டித்தார். “கரூரில் நடந்ததை மீண்டும் நடக்க விட மாட்டேன்” என்ற உறுதியான குரல், இப்போது இணையத்தில் “லேடி சிங்கம்” என்று கொண்டாடப்படுகிறது. விஜய் 11 நிமிடங்கள் பேசிய கூட்டத்தில், இஷா சிங்கின் 30 வினாடி வீடியோதான் இப்போது மிகப்பெரிய தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது!
இதையும் படிங்க: முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினருக்கு மது விற்பனை... சவுதி அரசு எடுத்த பரபரப்பு முடிவு...!