பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற வழக்கில், தலைமறைவாக உள்ள வெள்ளத்துரையின் முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாப்பான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை. பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான 1.4 ஏக்கர் நிலத்தைப் போலியாகப் பத்திரம் பதிவு செய்து அபகரித்ததாக இவர் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தலைமறைவாக உள்ள வெள்ளத்துரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை; தனிநீதிபதி உத்தரவு மற்றும் டிகிரியின் அடிப்படையிலேயே பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலத்தை வாங்கிய என் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: காகிதத்தில் தான் நடவடிக்கை இருக்கா? தெரு நாய் பிரச்சனையில் சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

இந்த மனு நீதிபதி ராஜசேகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வாதிட்டார். சம்பந்தப்பட்ட சொத்தின் உண்மை மதிப்பு ரூ.16 கோடி. ஆனால், மனுதாரர் ரூ.2 கோடிக்கு வாங்கியதாகக் கூறுகிறார். நிலத்தைப் பதிவு செய்யத் தீர்மானம் நிறைவேற்றியவர்களுக்கு மொத்தமாகக் ரூ.1 லட்சம் அனுப்பப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
காசோலை மூலம் பணப் பரிவர்த்தனை நடந்ததாகப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், வங்கியில் எந்தவொரு பணப் பரிமாற்றமும் நடைபெறவில்லை. விசாரணை பாதிக்கும்: சிபிசிஐடி விசாரணை தீவிரமடைந்து ஆரம்பக் கட்டத்தில் உள்ளதால், மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணை கடுமையாகப் பாதிக்கும்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜசேகர் பிறப்பித்த உத்தரவில் நிலத்தை விற்பனை செய்த முருகதாஸ் என்பவருடன் மனுதாரர் இணைந்து திட்டமிட்டே பத்திரப்பதிவு செய்துள்ளார். இருவருமாகச் சேர்ந்து போலியான ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்றிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. நிலத்தின் உண்மையான மதிப்பும் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது.
பத்திரம் பதிவு செய்யப்பட்டதற்கான உண்மையான பணப் பரிவர்த்தனை சான்றுகளையோ அல்லது நிலத்தின் உரிமையியல் ஆவணங்களையோ மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. மேலும், சார் பதிவாளருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டதை இதில் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது; அவரது வழக்கின் தன்மை வேறு.
தீர்மானம் நிறைவேற்றியவர்களுக்குத் தொகை அனுப்பப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சிபிசிஐடி விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் நிலையில், மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கினால் சாட்சியங்கள் கலைக்கப்பட்டு விசாரணை பாதிக்கப்படும். எனத் தெரிவித்து, வெள்ளத்துரையின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: எம்.எல்.ஏ.க்கள் வெற்றி செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்குகள்..! பதிலளிக்க ஆணை..!!