காய்ச்சலுக்கு தவறான முறையில் ஊசி செலுத்தியதோடு, அடுத்தடுத்து உரிய கவனிப்பின்றி அலட்சியமாகச் சிகிச்சை அளித்ததால் தசைகள் அழுகி உயிருக்கு ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்ட நபருக்கு, சம்பந்தப்பட்ட மூன்று மருத்துவர்களும் கூட்டாக சேர்ந்து ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" என சென்னை நுகர்வோர் நீதிமன்றம் மிக வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
தமிழக மருத்துவ மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில், சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிரம்மானந்த் என்ற நுகர்வோர் தனக்கு இழைக்கப்பட்ட மருத்துவக் குறைபாட்டிற்கு எதிராகச் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். தனக்கு ஏற்பட்ட சாதாரண காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவிற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சரஸ்வதி தில்லிராஜிடம் சிகிச்சைக்குச் சென்றபோது, அவர் செலுத்திய ஊசியே ஒட்டுமொத்தப் பாதிப்பிற்கும் மூலக்காரணமாக அமைந்தது என்று மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். அந்த ஊசி செலுத்தப்பட்ட உடனேயே, குறிப்பிட்ட இடத்தில் கடுமையான வீக்கம், உடல் முழுவதும் அரிப்பு மற்றும் உட்காரக் கூட முடியாத அளவுக்குத் தாங்க முடியாத வேதனை ஏற்பட்டதாகத் தனது மனுவில் அவர் வேதனையுடன் விவரித்திருந்தார்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தொடர்ந்து, தனக்கு ஏற்பட்ட வீக்கம் மற்றும் தீவிரப் பாதிப்பிற்காகத் தண்டையார்பேட்டையில் உள்ள கே.கே. மருத்துவமனை மருத்துவர் குணசேகர் மற்றும் ஸ்ரீ மருத்துவமனை மருத்துவர் பார்த்திபன் ஆகியோரை நாடியபோதும், அவர்களும் உரிய பரிசோதனையின்றி தவறான சிகிச்சையையே தொடர்ந்ததாகப் பிரம்மானந்த் குற்றம் சாட்டியிருந்தார். இந்த அடுத்தடுத்த தவறான மருத்துவ அணுகுமுறைகளால், ஊசி போடப்பட்ட இடத்திலிருந்த தசை நார்கள் முற்றிலும் அழுகிப்போய் (Necrosis), உயிருக்கே பேராபத்து விளைவிக்கும் மிகக் கொடிய நிலைக்குத் தான் தள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்த மனுதாரர், தனது வாழ்வாதாரப் பாதிப்பிற்கும், மன உளைச்சலுக்கும் காரணமான மருத்துவர்களிடமிருந்து உரிய இழப்பீட்டைப் பெற்றுத்தர வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.
இதையும் படிங்க: ராஜினாமாவை ஏற்றதில் உள்நோக்கம் இல்லை: அதிமுக வழக்கில் சட்டமன்றச் செயலாளர் விளக்கம்!
இந்த அதிர்ச்சியூட்டும் மருத்துவ அலட்சியம் தொடர்பான வழக்கை மிக விரிவாக விசாரித்த சென்னை நுகர்வோர் தீர்ப்பாய உறுப்பினர்கள் சதீஷ்குமார், வினோத் குமார் மற்றும் அமலா ஆகியோர் அடங்கிய அமர்வு, மருத்துவர்களின் அப்பட்டமான கடமைத் தவறுதலை உறுதி செய்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பிரம்மானந்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ஒரு கோடி ரூபாயையும், வழக்குச் செலவுத் தொகையாக 30 ஆயிரம் ரூபாயையும் மருத்துவர்கள் சரஸ்வதி தில்லிராஜ், குணசேகர் மற்றும் பார்த்திபன் ஆகிய மூவரும் கூட்டாகச் சேர்ந்து, தீர்ப்பு வெளியான 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தர பிறப்பித்துள்ளது. மேலும், இந்தத் தொகையைத் தவாணைக்குள் வழங்கத் தவறும்பட்சத்தில், ஒட்டுமொத்த இழப்பீட்டுத் தொகைக்கும் ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க நேரிடும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நாளை தொடங்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மாநாடு: முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் 2 நாட்கள் ஆலோசனை!