தேர்தல் பயம் எங்களுக்குக் கிடையாது, அது எதிரணியினருக்குத்தான் இருக்கிறது" என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திருச்சியில் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கான நலத்திட்டங்களைச் சூழ்ச்சி செய்து யார் தடுக்க நினைத்தாலும், அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறியடிப்பார் என்று 'பஞ்ச்' வைத்தார். குறிப்பாக, இன்று காலை 9,089 பேருக்குப் பணி ஆணை வழங்கும் நிகழ்வில் முதலமைச்சர் ஆற்றிய "சூப்பர் குட் மார்னிங்" உரையை மேற்கோள் காட்டி அவர் உற்சாகமாகப் பேசினார்.

மத்திய அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த அமைச்சர், தேர்தல் நேரத்தில் மகளிர் உரிமைத் தொகையை முடக்கச் சூழ்ச்சிகள் நடைபெறுவதாகச் சாடினார். மத்திய அரசு சூழ்ச்சி செய்து மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தப் பார்த்தால், அதனை எதிர்கொள்ளும் வகையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வரவேண்டிய தொகையையும் சேர்த்து ரூ.5,000-ஆக அறிவித்த முதலமைச்சரின் செயல் ஒரு 'சர்ஜிகல் ஸ்டிரைக்' போன்றது என்று அவர் குறிப்பிட்டார். என்.டி.ஏ (NDA) கூட்டணி என்னதான் முட்டுக்கட்டை போட்டாலும், மக்கள் நலப் பணிகளில் திமுக அரசு பின்வாங்காது என்பதை இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கீழடியில் இந்தியாவின் முதல் திறந்தவெளி அருங்காட்சியகம்!: முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களின் தமிழக வருகை குறித்துப் பேசிய அவர், "அவர்கள் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் சொல்லியுள்ளார்கள், அவர்களை நாங்கள் வரவேற்கிறோம்" என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலின் போது அவர்கள் வந்ததால்தான் 40 இடங்களையும் வெல்ல முடிந்தது என்றும், தற்போது அவர்கள் அடிக்கடி வந்தால் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் 200 இடங்களைக் கடந்து வெற்றி பெறுவோம் என்றும் அவர் சவால் விடுத்தார். திமுக-விற்கு எதிராக என்.டி.ஏ கூட்டணி நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் அவர்களின் பலவீனத்தையே காட்டுகிறது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தனது பேட்டியில் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: தீரன் சின்னமலை வெண்கலச் சிலை திறப்பு!: காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!