திமுகவும் அண்ணா திமுகவும் திரைமறைவில் ரகசியக் கூட்டணி அமைத்து, முதலமைச்சர் நாற்காலியைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ள முயன்றனர். இந்தத் தார்மீகமற்ற அரசியலைக் கண்டு வேதனையடைந்த அம்மாவுடைய உண்மை விசுவாசிகள் தான், தமிழ்நாட்டிற்குச் சிறந்த ஆட்சியைத் தரக்கூடிய ஒரே தலைவர் முதலமைச்சர் விஜய் மட்டுமே என்பதை உணர்ந்து தவெக-வில் இணைந்துள்ளனர்; இதில் எவ்விதக் குதிரை பேரமும் இல்லை" என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், மூன்று அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்தது குறித்த விமரிசனங்களுக்கு அக்குவேறு ஆணிவேறாகப் பதிலடி கொடுத்தார். அவர் பேசுகையில், "திமுக-வும், அதிமுக-வும் இணைந்து புதிய ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காய்களை நகர்த்திய போது, நல்லெண்ணம் உடையவர்களும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உண்மை விசுவாசிகளும் அங்கு இருப்பது சரியாக இருக்காது என்று தார்மீக முடிவு எடுத்தனர். தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான ஒருவரால் மட்டும்தான் தமிழ்நாட்டிற்கு ஒரு தூய்மையான, சிறந்த ஆட்சியைத் தர முடியும் என்ற அடிப்படையில் அவர்கள் முழு மனதோடு இங்கு இணைந்துள்ளனர். மக்கள் வியக்கத்தக்க அளவிலான மக்கள் நலத் திட்டங்கள் தவெக-வில் இருக்கின்றன. நல்ல பணியாற்றும் இடமாகத் தேர்ந்தெடுத்துத் தான் அவர்கள் இங்கு வந்துள்ளனர்" என்றார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் குதிரை பேரக் குற்றச்சாட்டை மறுத்துப் பேசிய அமைச்சர், "அவர்கள் பேசுவது குதிரை பேரமே அல்ல. உண்மையில், திமுக-வும் அதிமுக-வும் இணைந்து ஆட்சி அமைப்பது என்று சிந்திப்பதே அரசியல் தார்மீகத்திற்குத் தவறான ஒன்று அல்லவா? யார் முதலமைச்சர், யார் துணை முதலமைச்சர் என்று தங்களுக்குள் முன்பே முடிவு செய்துவிட்டு, இப்போது அவர்கள் பேசுவது சரியான நேரம் அல்ல; இதற்கு வரவிருக்கும் காலம் தான் சரியான பதிலைச் சொல்லும். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தவெக-விற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த அணியில் இருந்து 3 எம்.எல்.ஏ-க்கள் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர். இதில் யாருக்கும் முரண்பாடு இல்லை, எல்லோரும் தெளிவாக இருக்கிறார்கள். அவரவர் தங்களது தார்மீக மனநிலைக்கேற்பச் சரியான முடிவை எடுத்து வருகிறார்கள்" என்று விவரித்தார்.
இதையும் படிங்க: திமுக-வுடன் அதிமுக கூட்டணி வைக்க முயன்றது உண்மை!": தவெக-வில் இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள் உடைத்த ரகசியம்!
சமீபகாலமாக மாநிலத்தில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள் குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குத் துடிப்புடன் பதிலளித்த அமைச்சர், "இதைச் சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. கோவையில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரச் சம்பவத்தில், 24 மணி நேரத்திற்குள் சிசிடிவி (CCTV) காட்சிகளின் மூலமாகக் குற்றம் செய்தவர்களைக் காவல்துறை மிக வேகமாகத் தேடிக் கைது செய்துள்ளது. அதுமட்டுமன்றி, அதற்குரிய கடுமையான சட்ட நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொண்டுள்ளார்கள். முதலமைச்சர் விஜய் அவர்கள் இத்தகைய சட்டம் ஒழுங்கு விவகாரங்களை நேரடியாகத் தினசரி ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே இவரைப் போன்று எந்த முதலமைச்சரும் இவ்வளவு வேகமாகச் செயல்பட்டதில்லை. மாநிலத்தில் இத்தகைய அசம்பாவிதங்கள் எங்கும் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் தனிப்படை அமைத்தார்கள். அதற்கெனச் சட்டம் ஒழுங்கு காவல்துறை ஏடிஜிபி-யும் பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டுள்ளார்" என்று உறுதிபடத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கோருவது குறித்துப் பேசிய செங்கோட்டையன், "ஆட்சிப் பொறுப்பேற்று வெறும் 5 நாட்கள் அல்லது 10 நாட்கள் ஆன நிலையில், எப்படி உடனடியாக வெள்ளை அறிக்கை கொடுக்க முடியும்? மாநிலத்தின் நிதிநிலைகளை முழுமையாக ஆராய்ந்து பார்த்துத் தான் கொடுக்க வேண்டும். முறையான ஆய்வுகளுக்குப் பிறகு நிச்சயம் வெள்ளை அறிக்கை கொடுப்போம்; அதற்காக சும்மா வெள்ளை பேப்பரையெல்லாம் காட்டி ஏமாற்ற முடியாது. எங்கள் முதலமைச்சர் தெளிவான சிந்தனை உடையவர், மக்கள் நலன் காக்கக் கூடியவர், பெண்களுக்கு வரலாற்றில் இல்லாத அளவிற்கான தார்மீகப் பாதுகாப்பை அளித்தவர். எதிர்காலத்தில் இதுபோன்று சிறுமிகளுக்குக் கொடுமைகள் ஏற்படாத வகையில் தொலைநோக்குச் சிந்தனை கொண்டவர் முதலமைச்சர் விஜய். இந்த ஆட்சி தமிழ்நாட்டின் மிகச் சிறந்த ஆட்சி என்பதை ஒட்டுமொத்த மக்களும் விரைவில் பார்க்கப் போகிறீர்கள்" என்றார்.
தற்போதைய தவெக அரசின் பலம் குறித்துப் பேசிய அவர், "எங்கள் அரசு கொள்கை ரீதியாகத்தான் உறுதியாக நிற்கிறது. கொள்கை ரீதியாக நிற்கின்ற இந்த நல்லாட்சிக்குப் பக்கபலமாக இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் (VCK) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் அரணாக இருக்கின்றன. புதிய அரசு அமைந்து ஆறு மாதம் பொறுத்திருப்போம், அதற்குப் பிறகுதான் கேள்விகளைக் கேட்போம் என்று பொதுவெளியில் தெரிவித்து விட்டு, இப்போது சட்டமன்றம் தொடங்கி வெறும் எட்டு அல்லது பத்து நாட்களிலேயே கேள்விகளை எழுப்பிக் கூச்சல் போடுகிறார்கள் என்றால் அது எப்படி நியாயமாகும்?" என்று அமைச்சர் செங்கோட்டையன் தனது பேட்டியில் மிக ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார். தவெக ஆட்சியைத் தக்க வைக்க எம்.எல்.ஏ-க்கள் இணைந்து வரும் சூழலில், திமுக-அதிமுக ரகசியப் பேச்சுவார்த்தையை அமைச்சர் செங்கோட்டையனின் வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: குதிரை வேகத்தில் குதிரை பேரம்! தவெக அரசை 'துயரசக்தி' என அக்குவேறு ஆணிவேறாக விமர்சித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!