வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகளும் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளும் நீரில் மூழ்கியது. கொள்முதல் செய்யப்படாமல் இருக்கும் நெல்மணிகள் முளைத்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. நெற்பயிர்கள் நாசமானதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு சென்று நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டதுடன் விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தஞ்சாவூர் சென்றார். அங்கு ஆலங்குடி பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டார். தொடர்ந்து விவசாயிகளிடம் நயினார் நாகேந்திரன் பேசினார். அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.

இது தொடர்பாக கூறியுள்ள நயினார் நாகேந்திரன், தஞ்சாவூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையமும், தமிழ்நாடு வானிலை ஆய்வு மையமும், தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக பலமுறை எச்சரித்திருந்தபோதும், நெல் கொள்முதலை துரிதப்படுத்தாமல், விவசாயிகளை அலட்சியம் செய்ததன் விளைவாக நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, எதற்கும் பயனின்றி அழுகி நாசமாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "தாழ்த்தப்பட்டவர் என்பதால் புறக்கணிப்பு" - செல்வப் பெருந்தகைக்கு ஆதரவாக களமிறங்கிய நயினார் நாகேந்திரன்...!
தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடியில், நன்கு விளைந்த நெல் மணிகள், மழை வெள்ளத்தில் சரிந்து, நீரில் மூழ்கி முளைக்கட்ட தொடங்கி இருக்கிறது. இதனால் வேதனை அடைந்திருக்கும் விவசாயிகளையும் சந்தித்து ஆறுதல் கூறியதாகவும், எந்த குற்றச்சாட்டை முன்வைத்தாலும், எதிர்க்கட்சிகள் எந்த விமர்சனத்தை கூறினாலும், மக்கள் எந்த கோரிக்கையை எடுத்துரைத்தாலும், அதை ஏற்றுக் கொண்டு சரிசெய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வெறும் வாய்ஜாலங்கள் மூலம் அனைவரையும் திமுக அரசு ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். விவசாயி விரோத திமுக அரசின் உண்மையான முகம் இதுவே என்றும் சாடினார்.
இதையும் படிங்க: டெல்டாகார முதல்வரே! விளம்பரம் பண்ணது போதும் நிவாரணத்தை கொடுங்க…! நயினார் வலியுறுத்தல்…!