தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு உடல்நிலை கடந்த சில நாட்களாகவே மிகுந்த கவலைக்கிடமான நிலையில் உள்ளது. 101 வயதை எட்டிய இந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர், வயது மூப்பால் ஏற்பட்ட பல்வேறு உடல் பிரச்சினைகளால் கடந்த ஆறு மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்தார். குறிப்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்ததால் தலையில் ஏற்பட்ட காயம், பின்னர் மூச்சுத் திணறல், நுரையீரல் தொற்று போன்ற பிரச்சினைகள் அவரை பலமுறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றன.
பிப்ரவரி 1-ம் தேதி இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அங்கு தொடர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த ஒரு-இரண்டு நாட்களாக அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மருத்துவர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர் என்றாலும், அவரது நிலைமை தொடர்ந்து மோசமடைந்து கொண்டே இருப்பதாகவும், செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் மிக அதிக கவனிப்புடன் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நல்ல கண்ணுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக சிபிஐ வீரபாண்டியன் தெரிவித்தார். ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது இவ்வாறு கூறினார்.
இதையும் படிங்க: நல்லக்கண்ணு இறந்துவிட்டாரா? நம்பாதீங்க... CPI கொடுத்த விளக்கம்..!!
மருத்துவமனை அறிவிப்பு மட்டுமே அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருக்கும் என்று கூறினார். சிறந்த மருத்துவர்கள் நல்லகண்ணுவுக்கு தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வருகின்றனர் என்று தெரிவித்தார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். முடிவுகள் எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: நல்லகண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு..!! மருத்துவ நிர்வாகம் கொடுத்த அப்டேட்..!!