விபத்து காப்பீட்டில் காப்பீட்டுத் தொகையை முழுமையாகப் பெறுவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் குறைபாடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பாலிசி ஆவணங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளாதது மற்றும் இழப்பீடு கோரும் நடைமுறைகளில் ஏற்படும் தவறுகளே இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
விபத்தால் ஏற்படும் அனைத்து மருத்துவச் செலவுகளும் விபத்து காப்பீட்டின் கீழ் வருவதில்லை. சில காப்பீட்டு பாலிசிகள், மரணம் அல்லது நிரந்தர உடல் ஊனத்திற்கு மட்டுமே இழப்பீடு வழங்குகின்றன. சிறிய காயங்கள் மற்றும் தற்காலிக உடல்நல பாதிப்புகளுக்கு பல நேரங்களில் காப்பீட்டு பாதுகாப்பு கிடைப்பதில்லை.
மேலும், விபத்து நிகழ்ந்தபோது வாகன ஓட்டுநரிடம் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டாலோ அல்லது மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டாலோ, காப்பீட்டு நிறுவனங்கள் முழுமையான இழப்பீட்டை வழங்க மறுப்பது வழக்கமாக உள்ளது.
இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனாவின் கரூர் கணக்கு..! சட்டப் போருக்கு தயாராகும் திமுக..! சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு..!!
இந்த நிலையில், விபத்து காப்பீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநரின் கவனக்குறைவு அல்லது ஹெல்மெட் அணியாதது போன்ற காரணங்களால் இழப்பீட்டுத் தொகையை குறைக்கலாம்; ஆனால் அந்தக் காரணங்களைக் காட்டி முழுமையாக இழப்பீட்டை மறுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், தனிப்பட்ட காப்பீடு அல்லது குழு காப்பீட்டின் மூலம் கிடைக்கும் தொகையை, நீதிமன்றம் வழங்கும் இழப்பீட்டுத் தொகையில் இருந்து கழிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்டவரின் ஆண்டு வருமானத்தை கணக்கிடும்போது, வருமான வரிக் கணக்குத் தாக்கல் (Income Tax Return) அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மாதச் சம்பளம் பெறுபவர்களுக்கு சமீபத்திய வருமான விவரமும், சுயதொழில் செய்பவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி வருமானமும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பெண்கள் தொடர்பான இழப்பீடு வழங்கும் நடைமுறையிலும் முக்கிய வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இல்லத்தரசி ஒருவர் விபத்தில் உயிரிழந்தாலோ அல்லது நிரந்தர உடல் இயலாமைக்கு ஆளானாலோ, அவர் குடும்பத்திற்காக மேற்கொண்ட வீட்டு பராமரிப்பு பணிகளுக்காக தனியாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அந்த இழப்பீட்டைக் கணக்கிடும்போது, இல்லத்தரசியின் மாதாந்திர உழைப்பின் குறைந்தபட்ச பொருளாதார மதிப்பு ரூ.30,000 எனக் கணக்கிடலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. குடும்பம் என்பது சமூகத்தின் அடிப்படை அலகு. குடும்பத்தை உருவாக்கி, குழந்தைகளை வளர்த்து, அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் இல்லத்தரசிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. எனவே, அவர்களின் உழைப்புக்கு பொருளாதார மதிப்பும் சமூக மதிப்பும் உள்ளது" என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளது.
எனினும், உச்சநீதிமன்றம் இந்த வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தாலும், அவற்றை காப்பீட்டு நிறுவனங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையே பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்படுத்தி விளக்கும் நடைமுறைகள் சில காப்பீட்டு நிறுவனங்களில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக, பஞ்சாப் மாநிலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த பெண் ஒருவரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதாக இல்லை என்று அவரது கணவர் கடந்த 2001-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் இறுதி தீர்ப்பைப் பெற அவருக்கு சுமார் 25 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கீழமை நீதிமன்றங்களில் உரிய நிவாரணம் கிடைக்காததால், மனைவியின் உயிரிழப்புக்கான நியாயமான இழப்பீட்டைப் பெற பல ஆண்டுகள் நீதிமன்றங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இனிவரும் காலங்களில் உச்சநீதிமன்றத்தின் புதிய வழிகாட்டுதல்களை காப்பீட்டு நிறுவனங்கள் முழுமையாக பின்பற்றுமா, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மற்றும் நியாயமான இழப்பீடு வழங்கப்படுமா என்பது காப்பீட்டு நிறுவனங்களின் நடைமுறைகளைப் பொறுத்தே அமையும் என்ற கருத்து நிலவுகிறது.
இதையும் படிங்க: அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவப் பணியில் ஈடுபடக் கூடாது..!! அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்..!!