பாமகவில் இருந்து அண்மையில் விலகிய சேலம் மேற்குத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ அருள் தலைமையில், ஒன்றுபடுவோம், ஒருங்கிணைவோம் என்ற பெயரில் சேலம் சூரமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (ஜூலை 16, 2026) முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மருத்துவர் ராமதாஸின் தீவிர ஆதரவாளர்களான பாமக முன்னாள் நிர்வாகிகள் திரளாக வந்து பங்கேற்றனர்.
கூட்டத்தில் தனது அரசியல் பயணத்தையும், தற்போதைய மனவேதனையையும் முன்னாள் எம்.எல்.ஏ அருள் விரிவாகப் பகிர்ந்து கொண்டார், கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் 37 ஆண்டுகளாக மருத்துவர் ராமதாஸ் அய்யாவுடன் பயணித்து வருகிறேன். அவர் எப்போதும் எனக்குக் கடவுள் தான். என்னை நம்பி தேர்தலில் போட்டியிட வைத்து, சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்தவர் அவர். 1999 முதல் 2025 வரை அன்புமணி பங்கேற்ற அனைத்துக் கூட்டங்களையும் முன்னின்று ஏற்பாடு செய்தவன் நான். கட்சிக்காக 18 முறை சிறை சென்றுள்ளேன்; ஒருமுறை குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டேன்.

இப்படி எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தியாகம் செய்த என்னைப் பார்த்து அன்புமணி 'சாக்கடை' என வசைபாடுகிறார். அய்யாவைத் தலைவராக ஏற்றுப் பயணித்த எங்களை வழிகாட்டாமல் நடுத்தெருவில் நிறுத்தியுள்ளார். கட்சியில் இப்படிப்பட்ட பிரிவுகள் ஏற்படாமல் இருந்திருந்தால், பாமகவின் வாக்கு வங்கி இன்று 2 சதவீத அளவுக்குச் சரிந்திருக்காது.
இதையும் படிங்க: பாமக நிறுவனர் ராமதாஸுடன் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்திப்பு: 45 நிமிடங்கள் நீடித்த அவசர ஆலோசனை!
அன்புமணியின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள அருள், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்துப் பேசுகையில் இத்தனை அவமானங்களுக்குப் பிறகு, அன்புமணியை இனி ஒருபோதும் எங்கள் தலைவராக ஏற்க முடியாது. அய்யா ராமதாஸ் தற்போது அரசியல் துறவறம் பூண்டுவிட்டதால், நாங்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளோம். நாங்கள் மீண்டும் பாமகவிற்குத் திரும்பிச் செல்லும் பேச்சுக்கே இடமில்லை.
இந்தக் கூட்டத்தில் ராமதாஸ் உயிருடன் இருப்பதால் அவரது படத்தை நாங்கள் பயன்படுத்தவில்லை. மறைந்த தலைவர்களான காடுவெட்டி குரு, அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் படங்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளோம். தற்போது அப்பாவும் மகனும் ஒன்றிணைந்துவிட்டனர்; வன்னிய சமூக மக்கள் இனி ஏமாறக் கூடாது. அன்புமணியின் தலைமையை எங்களால் ஏற்க முடியாது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. விரைவில் புதிய கட்சி தொடங்குவதா அல்லது வேறு கட்சியில் இணைவதா என்பது குறித்து எங்களது ஆதரவாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் இறுதி முடிவை முறைப்படி அறிவிப்போம் என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாமக நிறுவனர் ராமதாஸுடன் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்திப்பு: 45 நிமிடங்கள் நீடித்த அவசர ஆலோசனை!