கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்குத் தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரதமரை வரவேற்கத் தயார் செய்யப்பட்டிருந்த முக்கியப் பிரமுகர்கள் பட்டியலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தும், அவர் நேரில் வராதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
பிரதமரை வரவேற்றுவிட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது: லிஸ்டில் அண்ணாமலை பெயர் இருந்தது. ஆனால் அவர் வரவில்லை என்று சொன்னார்கள். அவர் ஏன் வரவில்லை என்பது குறித்து நான் வந்தவுடன் கேட்டேன், அது என்னவென்று கேட்டுச் சொல்கிறேன். அவர் எங்களின் அன்பிற்குரிய தம்பி என்றார்.
இதையும் படிங்க: திருவொற்றியூர் கோயில்களில் எல். முருகன் வழிபாடு! ஆன்மீக பயணத்தில் அரசியல் பேட்டி இல்லை என மறுப்பு!
கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜியை 'ஊழல் கறை படிந்தவர்' எனச் சாடிய அவர், ஜெயிலில் ஒரு அமைச்சரை வைத்திருந்த பெருமை திமுக-விற்கே உண்டு. ஊழல் கறை படிந்தவரை இங்கு அனுப்பி கோவை மக்களைத் திமுக அவமதித்துள்ளது என்று சீறினார்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை சென்னை வருகிறார். மாநில ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகே பாஜக வேட்பாளர் பட்டியல் டெல்லியிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும். கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் 21 தொகுதிகளையும் அதிமுக-வே வெல்லும். போட்டி அதிமுக-விற்கும் திமுக-விற்கும் தான்; தவெக விஜய் வேட்பாளர்களைக் கண்டுபிடிக்கவே சிரமப்பட்டுள்ளார் என்று விமர்சித்தார்.
பிரதமர் வந்திருப்பதால் தோழமைக் கட்சிகள் எங்களை அழைக்கிறார்கள். எங்களது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது" எனத் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: 1% கூட உழைப்பு குறையாது! வானதி சீனிவாசன் அதிரடி! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?