தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிதி வழங்கல், நிலம் கையகப்படுத்தல் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.
அவரது கடிதம் தமிழக அரசுக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியுள்ளது. இது மாநில-மத்திய அரசுகளுக்கு இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில், ரயில்வே திட்டங்களுக்கான நிதியை விரைவாக வழங்க வேண்டும், தேக்கமடைந்த திட்டங்களை மீண்டும் தொடங்க வேண்டும், தமிழகத்துக்கு கூடுதல் புதிய ரயில்வே திட்டங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையும் படிங்க: சபரிமலை ரயில் பாதை! அங்கமாலி - எருமேலி!! கிரீன் சிக்னல் கொடுத்தது கேரள அரசு! ரூ. 3,800 கோடியில் திட்டம்!
ஆனால் அஸ்வினி வைஷ்ணவ் தனது பதிலில், தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலத்தில் வெறும் 24% மட்டுமே மாநில அரசு கையகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நிலம் கையகப்படுத்தியதற்காக ரூ.1,465 கோடி மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கியுள்ளதாகவும், நிதி ஒதுக்கப்படவில்லை என்ற ஸ்டாலினின் கூற்று அடிப்படையற்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை-தூத்துக்குடி ரயில்வே திட்டத்திற்கு 91% நிலம் இன்னும் கையகப்படுத்தப்படவில்லை என்றும், திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை ரயில் திட்டத்திற்கு 86% நிலம் கையகப்படுத்தப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராமேஸ்வரம்-தனுஷ்கோடி திட்டத்திற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் அஸ்வினி வைஷ்ணவ் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், நிலம் கையகப்படுத்தல் தாமதமே முக்கிய தடையாக உள்ளது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு ஒத்துழைப்பு அளித்தால் திட்டங்கள் விரைவாக முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த பதில் தமிழகத்தில் ரயில்வே திட்டங்களின் தாமதத்திற்கு மாநில அரசின் பங்கை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது. முன்னதாக அஸ்வினி வைஷ்ணவ், தமிழகத்தில் தேவையான 2,749 ஹெக்டேர் நிலத்தில் வெறும் 807 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளதாக லோக்சபாவில் தெரிவித்திருந்தார். மத்திய அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், UPA காலத்தை விட 7 மடங்கு அதிகம் என்றும் கூறியிருந்தார்.
இந்த கடிதப் போராட்டம் தமிழக ரயில்வே வளர்ச்சியை பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. மக்கள் மத்தியில் ரயில் திட்டங்கள் தாமதமடைவதற்கு யார் காரணம் என விவாதம் எழுந்துள்ளது. மாநில அரசு நிலம் கையகப்படுத்தலை விரைவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ரயில்வே திட்டங்கள் தமிழக பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியம் என்பதால், இரு தரப்பும் உடனடியாக ஒத்துழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக தென்மண்டல இளைஞர் அணி மாநாடு!! அசத்தல் தேர்தல் அறிவிப்புகள் வெளியாகும்? எதிர்பார்ப்பு!