தமிழக ஆளுநர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி, இன்று தமிழக மக்களுக்காகத் தனது உருக்கமான பிரியாவிடை செய்தியை வெளியிட்டுள்ளார். 2021 செப்டம்பர் முதல் சுமார் 54 மாதங்கள் தமிழகத்தில் ஆளுநராகப் பணியாற்றிய அனுபவங்களை, "வாழ்வின் பொற்கால நாட்கள் என அவர் வர்ணித்துள்ளார்.
மகா கவி பாரதி, கம்பர், வள்ளலார் முதல் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் வரை அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போலத் தமிழ் மண்ணின் நினைவுகள் என் உள்ளத்தில் மண்டுகின்றன எனத் தமிழ்ப் பண்பாட்டின் மீதான தனது ஈர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் பொறுப்பேற்ற போது, தமிழக மக்கள் காட்டிய அன்பும், எளிய மக்கள் முதல் குழந்தைகள் வரை தன் மீது சொரிந்த புன்னகையையும் தன்னால் மறக்க முடியாது என அவர் நெகிழ்ந்துள்ளார்.
இதையும் படிங்க: மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா! புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! மம்தா கடும் கண்டனம்!

கம்பரின் காவியம் எனக்கு விசாலமான பார்வையை அருளியது. அதனால்தான் மக்கள் மாளிகையில் 'கம்பர் வனம்' அமைத்து அவருக்குச் சிலை வைத்தேன். திருவாசகத்தைப் போலக் கம்பராமாயணத்தையும் இளைய தலைமுறை ஓதிக் களிக்க வேண்டும் எனத் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொழில்நுட்ப அறிவையும், செயற்கை நுண்ணறிவை (AI) அவர்கள் கையாளும் விதத்தையும் கண்டு வியப்படைந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், பல்கலைக்கழக நிகழ்வுகளில் அவர்கள் தனக்கு 'மேம்பாட்டு அனுபவத்தைத்' (Enriching Experience) தந்ததாகப் பாராட்டியுள்ளார்.
ஜம்புத் தீவு பிரகடனம் தந்த மருது சகோதரர்கள், வ.உ.சி, சுப்பிரமணிய சிவா எனத் தேசிய நீரோட்டத்திற்குத் தலைவெள்ளம் தந்தவர்கள் தமிழர்கள்" எனக் குறிப்பிட்டுத் தமிழகத்தின் வீர வரலாற்றைப் போற்றியுள்ளார்.
சொல்லச் சொல்ல விரியும் அனுபவங்களுக்கு அடிப்படை நீங்கள் காட்டிய அன்பு. என் நன்றியை உரைக்க வார்த்தைகள் போதா எனக் குறிப்பிட்டு, என்றும் உங்கள் சகோதரன் ஆர்.என். ரவி எனத் தனது மடலை அவர் நிறைவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: பத்ம விருது வெற்றியாளர்களுக்கு 'மக்கள் மாளிகையில்' கௌரவம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு!