இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தி துன்புறுத்தினால் இலங்கையில் இருந்து வரும் இலவங்கம் உள்ளிட்ட எவ்வித பொருட்களையும் வாங்க மாட்டோம் என வர்த்தக நல சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம் செவ்வாய்பேட்டை மளிகை வர்த்தக நல சங்கத்தின் 101 ஆவது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் S.C.நடராஜன் தலைமை தாங்கினார்,
பொதுக்குழு கூட்டத்தில், சங்கத்தின் செயலாளர் தர்மலிங்கம் ஆண்டறிக்கை வாசித்தார்.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் குறித்து சங்கத்தின் தலைவர் நடராஜன் கூறுகையில் , இலங்கை அரசு தமிழக மீனவர்களின் 30 படகுகளை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடரும் பட்சத்தில், இலங்கையிலிருந்து இலவங்கம் உள்ளிட்ட பொருட்களை வாங்க மாட்டோம்.
இதையும் படிங்க: இலங்கைத் தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல... மத்திய அரசு அறிவிப்பு
பன்னாட்டு நிறுவனங்களின் வணிகம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது சில்லறை வணிகத்தினரை வெகுவாக பாதிக்கிறது. எனவே இதனை ஒழுங்குப்படுத்த மத்திய அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் அன்றாடம் உபயோகிக்கும் அத்தியாவசிய பொருள்களின் விலைகள் தாறுமாறாக உயர்வதற்கு தமிழக அரசு பொறுப்பல்ல என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டுக்கு தேவைப்படும் உளுந்து ஆந்திராவில் இருந்தும், துவரை கர்நாடகாவில் இருந்தும் , கடலை உள்ளிட்ட பயிறு வகைகள் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இருந்தும் , பூண்டு மகாராஷ்டிராவில் இருந்தும் வருவதால் இந்த பொருள்களின் விலை ஏற்றத்திற்கு தமிழக அரசோ, தமிழக வணிகர்களோ பொறுப்பு ஏற்க முடியாது என்றும் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
திருமண வாழ்விலே பொன் விழா கண்ட முதலமைச்சர் அவர்களுக்கும் அவரது மனைவியாருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வணிகர் சங்க நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், கோகுல், ராஜேஷ்குமார், சீனிவாசன், சாந்திலால் ஜெயின் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கச்சத்தீவு தமிழர்கள் உரிமை! என்ன திமிரு இருக்கும்? இலங்கை அதிபரை சாடிய வேல்முருகன்