நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூர் மண்டி வீதியில் காட்பாடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருமாறன் வேலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சோனியா அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ரவிக்குமார் ஆகிய மூன்று தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது, காலம் முழுவதும் உழைத்து, உழைத்து களைத்திருக்கிற உழவர் குடி மக்கள், இலவச அரிசி போட்டால்தான் வாங்கிச் சாப்பிட்டு வயிறு வளர்த்து உயிர் பிழைக்க முடியும் என்கிற ஏழ்மை, வறுமை நிலையில் வைத்திருந்தால் இது எப்படிப்பட்ட வளர்ச்சி? எப்படிப்பட்ட போக்கு?
தமிழனுக்கென்று ஒரே ஒரு பண்டிகை, தேசியப் பண்டிகை 'பொங்கல்'. ஆண்டுதோறும் உழைத்து ஓராண்டுக்கு ஒருமுறை வருகிற அந்த தேசத்தின் திருவிழா, தேசியப் பண்டிகைக்கு அவன் அரிசி, வேட்டி,சேலை,கரும்பு வாங்கி கொண்டாட முடியாதா?. அரசு காசில் வேட்டி சேலையை கொடுக்கறதுக்கு உன் முத்திரை எதற்கு வருகிறது? உன்னுடைய சின்னம், உன்னுடைய படம் ஏன் வருகிறது?
இதையும் படிங்க: “ஓட்டு போடப்போற பொண்ணே கலங்கி நிக்காத...” - பாட்டு பாடி வாக்குசேகரித்த சீமான்... அனல் தெறிக்க பேச்சு...!
அரசு காசிலே தன் கட்சிக்கும் சின்னத்திற்கும் விளம்பரம் செய்வது எவ்வளவோ கேவலமானது என்பதை கற்றறிந்த பெருமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?. இந்த நாட்டின் முதல் அமைச்சர் சட்டசபையிலே பேசுகிறார்கள், 'கடந்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு நாங்கள் அனுமதி கொடுத்திருக்கிறோம்' என்று. இதில் என்ன பெருமை?
போராட வேண்டிய ஒரு லட்சம் பிரச்சனைகளை என் மக்களுக்குள் திணித்து இருக்கிறீர்கள், இது கொடுமை!. அப்போ இத்தனை பிரச்சனைகளை நமக்கு அளித்தது யார்? இந்தப் போராட வேண்டிய நிர்பந்தத்திற்கு நிலையை நமக்கு உருவாக்கியது யார்? இந்த ஆட்சியாளர்கள் தான்.
தி.மு.க விட்டால் அ.தி.மு.க, அ.தி.மு.க விட்டால் தி.மு.க. என்ன மாற்றத்தைக் கண்டீர்கள்? ஆள் மாறுகிறது, ஆட்சி மாறுகிறது, ஆட்சி முறை மாறுகிறதா?. இவர் வந்தாலும் ஊழல் இருக்கும் லஞ்சம் இருக்கும்; இவர் வந்தாலும் கொலை இருக்கும் கொள்ளை இருக்கும். அவர் வந்தாலும் ஊழல் இருக்கும், லஞ்சம் இருக்கும், கொலை இருக்கும் கொள்ளை இருக்கும். மாறுதல் ஒன்றுதான் நமக்கு ஆறுதல்.அதற்குத் தான் இந்த தேர்தல் வருகிறது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
படிக்கக் கல்வி இல்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை, பார்க்க வேலை இல்லை, மருத்துவம் இல்லை, பயணிக்கப் பாதை இல்லை, உண்பதற்கு நஞ்சில்லாத உணவு இல்லை, சுவாசிக்கக் காற்று இல்லை.இது என்ன வாழ்க்கை. கூட்டணிக்கு வந்தால் பல்லாயிரம் கோடி தருகிறேன் என்கிறார்கள்.கூட்டணிக்கு வந்தால் துணை முதல்வர் தருகிறேன் என்கிறார்கள்.
அப்ப ஏன் அங்க போகவில்லை. நல்லது செய்ய வேண்டும் என்றால் இவர்களோடு சேர்ந்து எந்த நல்லதைச் செய்ய முடியும்? இவர்களையெல்லாம் ஒழிக்காமல் ஊழல் லஞ்சத்தை எப்படி ஒழிப்பீர்கள். எல்லா மாநிலத்திலும் கள் இருக்கிறது என் மாநிலத்தில் மட்டும் கள்ளுக்கு தடை விதிப்பது ஏன்?
நாங்கள் ஏன் வெயில் நின்று கத்துகிறோம் என்றால் இந்த ஆட்சி தொடர கூடாது என்பதற்காகத்தான். இந்திய அரசியல் களத்திலே என் மீது மட்டும்தான் 260 வழக்குகள் - நான் இல்லாத சிறைகள் இல்லை; ஏறாத நீதிமன்ற படிக்கட்டுகள் கிடையாது
இலவசம் என்பது அடித்த கொள்ளையில் பங்கு என்பது தெரிந்து கொள்ள வேண்டாமா?. விவசாயிக்கு ஓட்டு போட்டு நாட்டை காப்பாற்றுங்கள். நல்ல ஆட்சி செய்திருந்தால் எதற்கு காசு கொடுக்க வேண்டும். கூட்டணி என்பது ஏமாற்றுவது. கட்டிய கோமணமும் களவாடப்படும் முன்பு தமிழ் சமூகம் விழித்துக் கொள்ள வேண்டும்.
எங்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும் என நான் கேட்கவில்லை. திமுக மற்றும் அதிமுகவிற்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். ஒரு முறை எனக்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் என கேட்கிறோம்
சரியாக இருந்தால் எனக்கு வாக்களியுங்கள். இல்லையென்றால் அந்த சனியன்களையே கட்டிப்பிடித்து அழுவுங்கள் என்ன பேசி முடித்தார்
இதையும் படிங்க: முதல் ஆளாக ஆட்டத்தை ஆரம்பித்த சீமான்... கையில் வேலுடன் சொன்ன அதி முக்கிய தகவல்...!