குன்னூர் மார்க்கெட் கடைகளை இடித்து புதிதாக கடைகளை அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு. நாளை ஒருநாள் முழு பந்த் நடத்த வியாபாரிகள் முடிவு. ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கால் டாக்சி என அனைவரையும் ஒத்துழைப்பு வழங்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில், 800க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து எந்தவொரு முன் அறிவிப்புமின்றி திடீரென வாடகை உயர்த்தப்பட்டதாகவும், உயர்த்தப்பட்ட வாடகை குறித்து கடந்த 2021 ஆம் ஆண்டு தான் நகராட்சியினர் வியாபாரிகளுக்கு தெரிவித்ததாகவும் கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் 6 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கடை வாடகையை செலுத்த கூறி அதிகாரிகள் தொடர்ந்து வசூல் செய்து வருகின்றனர். கடைகளை விட முடியாமல் தவிக்கும் பட்சத்தில் கடை வியாபாரிகள் சிலர் படிபடியாக நிலுவை தொகையை செலுத்தியும் வந்தனர். இதற்கிடையே மார்கெட் கடைகளை இடித்து, 41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள தற்காலிகமாக மாற்று இடத்தில் கடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஒரு பக்கம் ஈரான்... மறுபக்கம் ஏமன்... ஆழம் தெரியாமல் காலைவிட்டு கதறும் இஸ்ரேல்...!
கடைகளை இடித்தால் வாழ்வாதாரம் இழக்கும் நிலை உள்ளதால் அனைத்து வியாபாரிகளும் ஒன்றினைந்து விரைவில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இந்த நிலையில் நேற்று நகராட்சி அதிகாரிகள் 324 கடைகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கினர். இதனை கண்டித்து இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வியாபார சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தி நாளை ஞாயிற்றுக்கிழமை குன்னூரில் முழு பந்த் நடத்த தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். வியாபாரிகள் மட்டுமின்றி ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்களிடம் இது தொடர்பாக எடுத்துரைத்து அவர்களையும் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
....
இதையும் படிங்க: #BREAKING: வெளியானது நீட் தேர்வு முடிவுகள்.. இணையதள வாயிலாக காண ஏற்பாடு..!