சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர்கள், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆகியோரது குரு பூஜையை முன்னிட்டு வரும் திங்கள்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒன்றியங்களைச் சார்ந்த அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட பொற்கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் வருகிற 27 ஆம் தேதி மருதுபாண்டியர்களின் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டும் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் வருகின்ற 30 ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி, 63-வது குருபூஜை விழாவினை முன்னிட்டும், மேற்கண்ட தேதிகளில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர், திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில் மற்றும் இளையான்குடி ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வேறு ஒரு நாளில் பள்ளிகள் இயங்குவதற்கு மாவட்ட கல்வித் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், மேற்குறிப்பிட்டுள்ள தேதிகளான 27.10.2025 மற்றும் 30.10.2025 ஆகிய தேதிகளில் கீழடி அருங்காட்சியகத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும், மருதுபாண்டியர்களின் நினைவேந்தல் தினம் 27.10.2025 அன்று காளையார்கோவிலில் கடைபிடிக்கப்படுவதால், சிவகங்கை மாவட்டத்தில் 163(1) பாரதிய நியாய சன்ஹிதா 2023 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி, 63வது குருபூஜை விழா மற்றும் மருதுபாண்டியர்களின் நினைவேந்தல் தின விழா ஆகியவைகளுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த சென்றுவர அரசு பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் சட்டம் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டு வருகின்ற 27.10.2025 மற்றும் 30.10.2025 ஆகிய தேதிகளில் 35 சிறப்பு நிர்வாக நடுவர்கள் நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING வெளுத்து வாங்கும் கனமழை... தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...!
எனவே, பொதுமக்கள் அரசின் விதிமுறைகளுக்குட்டு அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த இரண்டு தினங்களிலும் மாவட்டம் முழுவதும் உள்ள மதுபான கடைகளை மூடவும் ஆட்சியர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING கனமழை எதிரொலி... இந்த 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை...!