பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், பக்தர்களின் காணிக்கையான அமெரிக்க டாலர்களைத் திருடிய கோயில் ஊழியர் ஒருவர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோயில் உண்டியல் எண்ணும் பணியின் போது நடைபெற்ற இந்தத் திருட்டுச் சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வழக்கமாக நடைபெறும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் ஈடுபட்டிருந்தனர். காணிக்கைகளைத் தரம் பிரித்து எண்ணிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த கோயில் ஊழியர் ஒருவர் உண்டியலில் இருந்த வெளிநாட்டுப் பணத்தை (அமெரிக்க டாலர்கள்) மறைத்துத் திருட முயன்றுள்ளார். இதன் இந்திய மதிப்பு சுமார் ₹12,500 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் அங்கிருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த ஊழியர் பணத்தைத் திருடித் தனது சட்டைப் பையில் மறைத்து வைப்பது தெளிவாகத் தெரிந்தது.

ஆதாரங்களுடன் கையும் களவுமாகப் பிடிபட்ட அந்த ஊழியரை, கோயில் இணை ஆணையர் மாரிமுத்து அவர்கள் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாகத் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.3,716 கோடி வீட்டை முடக்கியாச்சு! ரூ.15,700 கோடி சொத்து ஃப்ரீஷ்!! அனில் அம்பானி பிடியை இறுக்கும் அமலாக்கத்துறை!
புனிதமான கோயில் வளாகத்திலேயே ஊழியரே இத்தகையக் கைவரிசையில் ஈடுபட்டது கோயில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் உண்டியல் எண்ணும் பணியில் கூடுதல் கண்காணிப்புப் போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தோழர் நல்லகண்ணுவுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை... முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!