2014-15 நிதியாண்டு மற்றும் 2024-25க்கு இடையில் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ.2532.59 கோடியை செலவிட்டுள்ளது. இது மற்ற 5 பாரம்பரிய இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகியவற்றிற்கான மொத்த செலவான ரூ.147.56 கோடியைவிட 17 மடங்கு அதிகம் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் தெரிய வந்துள்ளது.
சமஸ்கிருதத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக ரூ.230.24 கோடியும், தமிழ் உள்ளிட்ட மற்ற ஐந்து மொழிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் ரூ.13.41 கோடியும் செலவு செய்துள்ளது மத்திய அரசு. இதில் தமிழ், சமஸ்கிருதத்தின் மொத்த நிதியுதவியில் 5% க்கும் குறைவாகவும், கன்னடம் மற்றும் தெலுங்கு தலா 0.5% க்கும் குறைவாகவும், ஒடியா மற்றும் மலையாளம் தலா 0.2% க்கும் குறைவாகவும் பெற்றுள்ளன.

இந்த நிலையில் சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது. இந்நிலையில், சமஸ்கிருதத்துக்கு மட்டும் மிக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை விமர்சித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "சமஸ்கிருதம் கோடிக்கணக்கில் பணம் பெறுகிறது, தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு!" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சர்வதேச யோகா தினம்.. நீல நிற உடையில் யோகா செய்து அசத்திய அண்ணாமலை..!
இதற்கு மறுப்பு தெரிவித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமாலை ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து அண்ணாமலை தெரிவித்திருப்பதாவது ; திமுக ஆட்சியின் மீதான அதிருப்தியையும், கோபத்தையும் தமிழக மக்கள் வெளிப்படையாகக் காட்டும்போதெல்லாம், போலி தமிழ்ப்பற்று நாடகமாடி, பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் ஆதிகால வழக்கம்.

திமுகவின் தொடர்ச்சியான இந்து மத விரோதப் போக்கை எதிர்த்து, மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் கூடிய பல லட்சம் தமிழக மக்களின் உணர்வு, திமுகவை ஆட்டம் காண வைத்திருக்கிறது. உடனே சில வாடகை வாயர்களைத் தூண்டிவிட்டு, ஏற்கனவே பல முறை விளக்கமளித்த மொழி வாரியான நிதி ஒதுக்கீட்டைக் குறித்து பொய்யான பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின்.
அரைத்த மாவையே நீங்கள் மீண்டும் மீண்டும் அரைப்பதனால், இதோ மொழி வாரியாக வழங்கப்படும் நிதி தொடர்பாக நான் விளக்கமளித்த காணொளி உங்கள் பார்வைக்கு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே.
தமிழகத்தில் பல முறை ஆட்சியில் இருந்தும், மத்தியில் பசையான அமைச்சர் பதவிகளை வகித்தும், அப்பா, மகன், பேரன் என தலைமுறை தலைமுறையாக தமிழ்ப்பற்று என்று வெறும் வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருப்பதைத் தவிர, கேரளா மாநிலத்திலோ, கர்நாடகாவிலோ, ஆந்திர மாநிலத்திலோ, புதிய தமிழ் பல்கலைக்கழகங்கள் அமைக்க என்ன முயற்சி எடுத்தது திமுக? யார் உங்களைத் தடுத்தார்கள்?

நீங்கள் மத்திய அரசில், அமைச்சர் பதவி வாங்கிக் கொண்டு, உலகம் போற்றும் ஊழல்களைச் செய்து கொண்டிருந்த 2006 - 2014, 8 ஆண்டுகளில், நீங்கள் அங்கம் வகித்த மத்திய அரசு சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய நிதி ₹675.36 கோடி. தமிழுக்கு வெறும் ₹75.05 கோடி மட்டுமே. அப்போது எங்கு சென்றது இந்த வாடகை வாய்கள்? கடந்த ஆண்டு, தமிழகப் பள்ளிக்கல்வித்துறை, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ₹ 11.68 கோடி ரூபாய் செலவிட்டதே. அது எதற்காக என்று கூற முடியுமா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: எனக்கு வேற வழி தெரியல ஆத்தா..! முதல்வர் மருந்தகத்தை கிண்டலடித்த அண்ணாமலை..!