நாடு முழுவதும் சொத்து ஆவணங்களை டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைத்து, ஒவ்வொரு சொத்துக்கும் தனித்த அடையாள அட்டை வழங்கும் மத்திய அரசின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகம் உட்பட சில மாநிலங்களில் இந்தப் பணிகள் தாமதமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து தொடர்பான ஆவணங்களை நவீன முறைக்கு மாற்றும் நோக்கில், மத்திய அரசு சிறப்பு திட்டத்தை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக கிராம வாரியாக சொத்துக்களின் டிஜிட்டல் வரைபடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், நில உரிமை மற்றும் சொத்து விவரங்களை மின்னணு வடிவத்திற்கு மாற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தத் தகவல்களின் அடிப்படையில், ஒவ்வொரு சொத்துக்கும் தனிப்பட்ட எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒரு சொத்தின் இருப்பிடம், உரிமையாளர் விவரம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு!! 8 மாத கர்ப்பம்! 19 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு!
மத்திய அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் உள்ள 3.38 லட்சம் கிராமங்களில் பெரும்பாலான பகுதிகளுக்கு டிஜிட்டல் வரைபடம் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. சுமார் 3.24 கோடி சொத்துக்களுக்கு தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, கர்நாடகா, ராஜஸ்தான், கோவா உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்தத் திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் தமிழகம், தெலுங்கானா, கேரளா, சிக்கிம், அசாம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சொத்துக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, சொத்து ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் பணிகள் அதிக அளவில் நடைபெற்றுள்ளதாகவும், ஆனால் தனித்த அடையாள அட்டை வழங்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான கொள்கை முடிவுகள் எடுக்கப்படாததே தாமதத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், சொத்து தொடர்பான பல்வேறு ஆவணங்கள் ஒருங்கிணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பத்திரம் என்பது சொத்து பரிமாற்ற விவரங்களையும், பட்டா என்பது தற்போதைய உரிமையாளர் விவரங்களையும் உறுதி செய்யும் நிலையில், புதிய அடையாள அட்டை இந்த இரு தகவல்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் இருக்கும்.
மேலும், உரிமையாளரின் ஆதார் விவரங்களுடன் சொத்து தகவல்கள் இணைக்கப்பட்டால், ஒரு நபரின் பெயரில் உள்ள சொத்துக்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் இருப்பிடத்தை எளிதில் கண்காணிக்க முடியும். இதனால் போலி ஆவணங்கள், சொத்து மோசடிகள் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவும் என கூறப்படுகிறது.
சொத்து உரிமையாளர்களுக்கு எதிர்காலத்தில் முக்கியமான ஆவணமாக மாறக்கூடிய இந்த டிஜிட்டல் சொத்து அடையாள அட்டை திட்டத்தை தமிழகத்தில் எப்போது செயல்படுத்தப் போகிறது என்பது தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: நீட் போராட்டத்துக்கு பெற்றோர் தங்களது குழந்தைகளை அனுப்ப வேண்டாம்! பலிகடாவாக்காதீர்கள்! நடிகர் ரஞ்சித் சாடல்!