கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் திட்டம் தொடர்பாக எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபு விளக்கம் அளித்துள்ளார். கன்னியாகுமரி மக்களின் நலனுக்கு எதிராக தமிழ்நாடு அரசு எந்த சூழலிலும் முடிவு எடுக்காது என்று அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தின் கால நீட்டிப்பு தொடர்பான அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் பிரபு தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமத் திட்டம் குறித்து கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுடன் அரசின் சார்பில் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: “இனியாவது அமாவாசையை நாகராஜ சோழன் ஆக்காதீங்க”... விஜயை பங்கமாய் கலாய்த்த சத்யராஜ்...!
மேலும், மக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ அல்லது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையிலோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், உள்ளூர் மக்களுடன் கலந்தாலோசிக்காமல் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எந்த முடிவையும் மேற்கொள்ளாது என்றும் கூட்டத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதித்துறை அமைச்சர் மரியா வில்சன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அணுக்கனிம அகழ்வுத் திட்டத்திற்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், மக்களின் நலனையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் முன்னிறுத்தியே அரசு செயல்படும் என்று அமைச்சர் பிரபு அதிகாரப்பூர்வமாக மீண்டும் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை... நள்ளிரவில் மாஜிஸ்திரேட் பிறப்பித்த அதிரடி உத்தரவு... நடந்தது என்ன?