நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலைத்துறை சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசின் விருதுகள் கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு அங்கீகாரம் என்று குறிப்பிட்டார்.
துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, கலைத்துறை சம்பந்தப்பட்ட எந்தவொரு நிகழ்ச்சியிலும் கடந்த நான்காண்டுகளாக நான் கலந்து கொள்வதில்லை. நானும் உங்களில் ஒருவனாக இருந்து உருவானவன் தான் என்பதால், நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த விழாவிற்கு வந்திருப்பது மீண்டும் வகுப்பறைக்குத் திரும்பியது போன்ற ஒரு உணர்வைத் தருகிறது.
விருதுகள் அறிவிக்கப்பட்ட போது சில விமர்சனங்கள் வந்தன. ஆனால், தேர்வுக் குழுவின் முறையானப் பரிந்துரையின் அடிப்படையிலேயே தகுதியான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகிய இருவரும் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியவர்கள். அவர்களின் வழியில், நல்ல படைப்புகளையும் கலைஞர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே இந்த அரசின் ஒரே நோக்கம்.
இதையும் படிங்க: ஒரு கோடி குடும்பங்கள் புறக்கணிப்பு: திமுக அரசின் நிதியுதவி திட்டத்தில் பாரபட்சம் என பாமக புகார்!

சின்னத்திரை கலைஞர்கள் தமிழக மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளீர்கள். நீங்கள் ஒருமுறை சிரித்தால் மக்களும் சிரிப்பார்கள், நீங்கள் ஒரு காட்சிக்கு அழுதால் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் அழுவார்கள். அந்த அளவிற்கு மக்கள் மனங்களில் நீங்கள் இடம்பிடித்துள்ளீர்கள்" எனப் பாராட்டினார்.
திரைத்துறையின் வளர்ச்சிக்கு நம் அரசு என்றும் துணை நிற்கும். 805 உறுப்பினர்களுக்கு ரூ.47 லட்சம் மதிப்பில் கல்வி, திருமண மற்றும் மகப்பேறு உதவித்தொகைகளை இந்த அரசு வழங்கியுள்ளது. கலைஞர்களின் நலன் காப்பதில் கலைஞர் வழியில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது.

"2009-ல் கலைஞர் அவர்கள் பேசும் போது, 'ஒரு கலைஞனுக்கு எத்தனை விருதுகள் கிடைத்தாலும் அது தாயின் முத்தத்திற்கு ஈடாகாது. தமிழ்நாடு அரசின் இந்த விருது தாயின் முத்தத்திற்குச் சமமானது' என்று கூறினார். அந்தப் பெருமைமிக்க விருதைப் பெறும் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என உதயநிதி ஸ்டாலின் உரையை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி: சுருக்குமடி வலை விவகாரத்தில் திங்கட்கிழமை விசாரணை!