தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தொகுதி-II மற்றும் IIA முதன்மைத் தேர்வின் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் காரணமாகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், தேர்வுக் கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றிய முக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இரண்டு உதவிப் பிரிவு அலுவலர்கள், நிரலர்கள், இரண்டு பிரிவு அலுவலர்கள் மற்றும் ஒரு சார் செயலாளர் ஆகிய 6 பேர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், துணைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட இந்தத் தேர்வுகள் வரும் மார்ச் 15, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் மீண்டும் நடத்தப்படும் எனத் தேர்வாணையம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: "நிர்வாகத் திறமையற்ற திமுக அரசு!" குரூப் 2 தேர்வு ரத்து குறித்து தவெக தலைவர் விஜய் கண்டனம்!
தேர்வு மையங்களில் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் பதிவெண் குளறுபடிகள் இனி நிகழாமல் இருக்க, கூடுதல் தொழில்நுட்ப வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கானத் தேர்வர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் வகையில் இத்தகையத் தவறுகள் இனி நடைபெறக் கூடாது எனத் தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தேர்வாணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கை ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குரூப் 2 தேர்வு ரத்து: இது ஒரு கையாலாகாத அரசு! எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!