முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு 300 புதிய பேருந்துகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, தொடக்க விழா நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான குற்றச்சாட்டுகளை போக்குவரத்துத் துறை மறுத்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள போக்குவரத்துத் துறை அதிகாரிகள், முதலமைச்சரின் பிறந்தநாளை ஒட்டி புதிய பேருந்துகளுக்கான எந்த தொடக்க விழாவும் நடத்த திட்டமிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ள பேருந்துகள் அனைத்தும் வரவிருக்கும் மிலாடி நபி பண்டிகை, தொடர் வார இறுதி விடுமுறை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்களை முன்னிட்டு கூடுதல் பயணிகள் வசதிக்காக இயக்கப்பட உள்ளதாக கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: நாடே திணறிக்கிட்டு இருக்கும் போது இது தேவையா விஜய்?... தவெக அரசை எச்சரித்த அன்புமணி...!

கடந்த பண்டிகைக் காலங்களில் போதிய பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிரமம் ஏற்பட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்திருந்தன. இதையடுத்து, பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி, சென்னையில் உள்ள கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் இருந்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, 300 புதிய பேருந்துகள் தொடக்க விழாவுக்காக வரவழைக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்ற தகவல் உண்மையல்ல என்றும், அவை அனைத்தும் வரவிருக்கும் தொடர் விடுமுறை நாட்களில் பொதுமக்களின் பயணத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பயன்படுத்தப்பட உள்ளன என்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், புதிய பேருந்துகளுக்கான எந்தவித தொடக்க விழா ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்றும், பயணிகள் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் சேவைகளை வழங்குவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு இப்படியொரு நிலையா?... கொதித்தெழுந்து தவெக அரசை விளாசித் தள்ளிய அன்புமணி...!