புதுக்கோட்டை: திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்த நர்சிங் மாணவி சீதாலட்சுமியின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் அருகே மணக்குடிபட்டியைச் சேர்ந்த வீரமணியின் மகள் சீதாலட்சுமி (21). இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். அவருக்கு மூக்கில் சதை வளர்ச்சி இருந்ததால் அவ்வப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் தவறான சிகிச்சை காரணமாக சீதாலட்சுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க தொழிலாளர் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் நேற்று நேரில் சந்தித்தனர். அப்போது, அரசு சார்பில் இரண்டு முக்கிய நிவாரண உதவிகளை வழங்கினர்.
இதையும் படிங்க: அதிர்ச்சி சம்பவம்..! ஸ்ரீரங்கம் தவெக தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிப்பு..!! மர்ம நபர்கள் வெறிச்செயல்..!
சீதாலட்சுமியின் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. மேலும், அவரது சகோதரி புவனேஸ்வரிக்கு தற்காலிக பணியிடத்தில் பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது. இந்த உதவிகள் குடும்பத்தினருக்கு ஓரளவு ஆறுதலை அளித்துள்ளன.

நர்சிங் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு வந்த சீதாலட்சுமியின் மரணம் மருத்துவத் துறையில் தவறான சிகிச்சை மற்றும் அலட்சியம் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் மீது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்தச் சம்பவம் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு மற்றும் மருத்துவப் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என குடும்பத்தினரும், உள்ளூர் மக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அமைச்சர் முகமது பர்வேஸ் குடும்பத்தினரிடம் பேசும்போது, “மரணம் மிகவும் வருத்தமளிக்கிறது. அரசு உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்” என உறுதியளித்தார். மாவட்ட ஆட்சியர் அருணாவும் குடும்பத்தினரின் இழப்புக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: எடப்பாடிக்கு ஷாக்..!! ADMK எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா..! அரசியலில் பரபரப்பு..!