தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று (ஏப்ரல் 07) மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இதில், சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் (TVK) சார்பில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த வேட்பாளர் அருண்குமார் அவர்களின் மனு அதிகாரப்பூர்வமாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் இன்று நடைபெற்ற வேட்புமனுப் பரிசீலனையின் போது, அருண்குமார் தாக்கல் செய்திருந்த மனுவில் சில முக்கிய ஆவணங்கள் இணைக்கப்படவில்லை என்றும், பிரமாணப் பத்திரத்தில் (Affidavit) சில விபரங்கள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் கண்டறியப்பட்டது. இதனையடுத்தே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துத் தமிழக வெற்றி கழகம் சார்பில் அருண்குமார் களம் இறக்கப்பட்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்திருந்தது. தற்போது அவரது மனு நிராகரிக்கப்பட்டிருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வீடு தேடி வரும் வாக்காளர் தகவல் சீட்டு! ஏப்ரல் 10 முதல் விநியோகம்...தேர்தல் ஆணையம் அதிரடி!
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அவர்கள் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அங்கு ஏற்கனவே ஏற்பட்ட சிறு தொழில்நுட்பக் குறைபாடுகளைச் சரிசெய்து அவர் திருத்தப்பட்ட மனுவைத் தாக்கல் செய்துள்ளதால், அவரது மனுக்கள் ஏற்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து அருண்குமார் தரப்பில் மேல்முறையீடு செய்யவோ அல்லது மாற்று வேட்பாளர் (Dummy Candidate) யாரேனும் மனுத்தாக்கல் செய்திருந்தால் அவர்களை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கவோ தவெக தலைமை ஆலோசித்து வருகிறது.
எடப்பாடி தொகுதியில் அதிமுக, திமுக மற்றும் இதர கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் முறையாக ஏற்கப்பட்டுள்ள நிலையில், அங்குக் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: 30 ஆண்டுகால உழைப்பு விற்பனை செய்யப்படுகிறது! காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலுக்கு ஜோதிமணி எம்.பி. கடும் எதிர்ப்பு!