தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இணைப் பொதுச்செயலாளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான சி.டி.ஆர்.நிர்மல் குமார், மதுரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதிமுக, பாஜக மற்றும் திமுக ஆகிய கட்சிகளைச் சரமாரியாகச் சாடினார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை 420 மலை எனச் சாடிய நிர்மல் குமார்: முன்பு எடப்பாடி பழனிச்சாமியை தற்குறி என்றும், காலில் விழுந்தவர் என்றும் விமர்சித்த அண்ணாமலை, இன்று பதவிக்காக 'அண்ணன் எடப்பாடி' எனக்கூறி வாக்கு கேட்கிறார். அதிமுகவின் ஊழல் பட்டியலை (ADMK Files) வெளியிடுவேன் என்று சொன்னாரே, அந்தப் பெட்டி இப்போது எங்கே? ஆளுநரிடம் கொடுத்த திமுக ஊழல் பட்டியலும் என்னவானது? எனக் கேள்வி எழுப்பினார்.
அதிமுக மற்றும் பாஜக மீண்டும் இணைந்தது குறித்துப் பேசுகையில்: 2023-ல் பாஜகவால் தான் தோற்றோம் எனக் கூறி கூட்டணியை முறித்த அதிமுக, இன்று மீண்டும் அவர்களுடன் சேர்ந்துள்ளது. ஜெயலலிதாவையும், எம்ஜிஆரையும் மறந்துவிட்டு மோடியையும் அமித்ஷாவையும் ஏற்றுக்கொண்டதால் அதிமுக பல இடங்களில் 3-ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது. தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவே பாஜகவுடன் அவர்கள் கூட்டணி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ராசிபுரம் வரை பரவிய கோபாலபுர ஊழல்! பஸ் வசதி கூட இல்லை என அண்ணாமலை தாக்குதல்!

காவல்துறை உயர் அதிகாரிகளின் மாற்றம் குறித்துப் பேசுகையில்: தமிழக டிஜிபி மற்றும் உள்துறைச் செயலாளர் மாற்றம் செய்யப்பட்டது, தவெக அளித்த புகாரின் பெயரிலேயே நடந்துள்ளது. திமுகவிற்கு ஆதரவாகச் செயல்படும் அதிகாரிகளை மாற்றி, நேர்மையான அதிகாரிகளைக் கொண்டுவர வேண்டும் என நாங்கள் கொடுத்த அழுத்தமே இதற்குப் பலன் அளித்துள்ளது.
85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் தபால் வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க அழுத்தம் கொடுக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். முதியவர்களை திமுகவிற்கு வாக்களிக்கச் சொல்லி மிரட்டும் வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்போம். திருப்பரங்குன்றத்தில் 8000 ரூபாய் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றனர். ஆனால் மக்கள் தெளிவாக உள்ளனர், அவர்கள் என்ன கொடுத்தாலும் தவெக-விற்கே வாக்களிப்பார்கள்.
காங்கிரஸ் கட்சி சிதம்பரம் குடும்பத்திடம் அடமானம் வைக்கப்பட்டுள்ளதாகவும், கார்த்திக் சிதம்பரம் தனித்து நின்றால் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என்றும் விமர்சித்தார். மேலும், விஜய்யின் ஜனநாயன் திரைப்படம் இணையத்தில் வெளியானதற்கு அரசியல் அழுத்தமே காரணம் என அவர் தெரிவித்தார். எங்கள் தலைவர் விஜய்க்கு அனுமதி கிடைத்தால் 24 மணி நேரமும் களத்தில் இருப்பார். ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகிறது என நிர்மல் குமார் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உடல்நலம் தேறி வருகிறேன், விரைவில் களத்திற்குத் திரும்புவேன்! வானதி சீனிவாசன் உருக்கமான வீடியோ!