கோவையில் நடந்த கொடூரமான சம்பவத்தால் உயிரிழந்த கல்லூரி மாணவர் அமுதனின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதேபோல் சட்டரீதியாக போராடி நீதி பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமுதன், கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
அண்மையில் கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு வெளியே தங்கியிருந்த அவர், கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டார். அமுதனும் அவரது நண்பர் ஸ்ரீமனும் வழிமறிக்கப்பட்டு கல்லூரிக்குப் பின்புறம் உள்ள மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டனர். பின்னர் அமுதன் தனது அறைக்குத் திரும்பினார். மாலையில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இந்தத் தாக்குதல் தொடர்பாக வெவ்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அமுதனின் பெற்றோர், கல்லூரியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு குறித்து தகவல் தெரிவித்ததால் அவர்கள் மகன் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். போலீசார் அமுதனை அழைத்து விசாரித்து போதைப்பொருள் கும்பல் பற்றிய தகவல்களைப் பெற்றதாகவும், அதன்பிறகு தான் தாக்குதல் நடந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். போலீஸ் தரப்பில் இது முந்தைய மோதல் மற்றும் கைபேசி பறிப்பு தொடர்பான பழிவாங்கல் என்றும், கல்லூரி நிர்வாகம் சீனியர்-ஜூனியர் மோதல் மற்றும் முந்தைய விடுதி சம்பவம் தொடர்பானது என்றும் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: இதுதான் நட்பா..?? சட்டசபையிலேயே எதிரிகளுடன் நெருக்கம் காட்டும் திமுகவினர்! கொந்தளித்த உதயநிதி ஸ்டாலின்!
சம்பவத்துடன் தொடர்புடைய பல மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தேடப்பட்டு வருகின்றனர்.இந்தச் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், போதைப்பொருள் தொடர்பான தகவல் தெரிவித்த மாணவர் கொல்லப்பட்டதாகக் கூறி அரசைக் கண்டித்தார்.
சபாநாயகர் ஆகஸ்ட் 17 அன்று இந்த விவகாரத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.இந்நிலையில் அமுதனின் பெற்றோரைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட உதயநிதி ஸ்டாலின், ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். திங்களன்று சட்டமன்றத்தில் இந்தச் சம்பவம் குறித்து விரிவாகப் பேசுவதாகவும், சட்டரீதியாகப் போராடி அமுதனின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பதாகவும் உறுதியளித்தார். அமுதனின் தாயார் சுமதி, உதயநிதி தான் தங்களுக்காகக் குரல் கொடுத்ததாகவும், கடைசி வரை நின்று நீதி வாங்கித் தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நான் பயப்பட மாட்டேன்... இன்னும் நூறு மடங்கு பேசுவேன்! திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஆவேசம்!