மதுரையில் நடைபெற்ற பாஜக - அதிமுக கூட்டணிப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரைக்கு, தமிழகத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காரசாரமான பதிலடியை வழங்கியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவிடம் முற்றிலும் அடிமையாகிவிட்டதாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரை கூட்டத்திற்காக அதிமுகவினர் பெரியார் படத்தை முகப்பில் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் மோடி வருவதை முன்னிட்டு, அங்கிருந்து பெரியார் படத்தை அகற்றச் சொன்னார்கள். அதற்கு அடிமைப்பட்டுப் படத்தையும் எடுத்துவிட்டு, அந்த இடத்தில் பாஜக சின்னத்தை வைத்துள்ளனர். அண்ணாவின் பெயரை எடுத்துவிட்டு அமித் ஷாவின் பெயரை வை என்று சொன்னால் கூட எடப்பாடி பழனிசாமி உடனே செய்வார்" எனச் சாடினார்.

நேற்றையக் கூட்டத்தில் பிரதமர் மோடி, என்னைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்' என்று பேசியிருந்தார். இதற்குப் பதிலளித்த உதயநிதி, நாங்கள் உங்களைப் பார்த்து பயப்படவில்லை. உங்களுடன் அமர்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லுங்கள், அவரது சம்மந்தி மீதுள்ள கேஸைப் பார்த்து பயப்பட வேண்டாம் என்று! உங்கள் கூட்டணியில் உள்ள பலரை மிரட்டி வைத்துள்ளீர்கள், அவர்களைப் பார்த்துச் சொல்லுங்கள் பயப்பட வேண்டாம் என்று எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: 4 ஆண்டுகால காத்திருப்பு! துணை முதல்வர் உதயநிதி வீட்டின் முன் பொதுமக்கள் கண்ணீர் போராட்டம்!
தனது அரசியல் வாழ்வு குறித்துப் பேசிய உதயநிதி, "பொது வாழ்க்கைக்கு வந்து நான் முதன்முதலாகப் பங்கேற்ற போராட்டமும், கைதானதும் சி.ஏ.ஏ (CAA) மற்றும் என்.ஆர்.சி (NRC) சட்டங்களை எதிர்த்துத்தான். இஸ்லாமிய பெருமக்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட அந்தச் சட்டங்களை நான் கிழித்தெறிந்தேன்" எனப் பெருமையுடன் தெரிவித்தார்.
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் இஸ்லாமியச் சமுதாயம் என்றென்றும் திமுக பக்கமே நிற்கும் என்றும், இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக ஆட்சி அமைப்பதை யாரும் தடுக்க முடியாது என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்த அதே நாளில், அவரை 'அடிமை' என உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசியலில் இன்னும் கத்துக்குட்டி.. பாஜவுக்கு முரட்டு அடிமை என விமர்சித்த உதயநிதிக்கு இபிஎஸ் தக்க பதிலடி..!!