சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய “நல்ல சாவே வராது” என்ற கருத்து தமிழக அரசியலில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் முதல்வர் விஜய் கடுமையாக விமர்சித்த நிலையில், தற்போது ஆர்.எஸ்.பாரதி தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதல்வர் விஜய், அரசியல் விமர்சனங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், பொதுமக்களை இழிவுபடுத்தும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்துவதில் அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். திமுகவுக்கு வாக்களிக்காத மக்களைப் பார்த்து “நல்ல சாவே வராது” எனக் கூறுவது எப்படி சரியாக இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு காரணமான பேச்சு, சைதாப்பேட்டையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாக கூறப்படுகிறது. அங்கு சைதாப்பேட்டை தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பணிகளை குறிப்பிட்ட அவர், அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் திமுகவுக்கு வாக்களித்திருந்தால் கட்சி வெற்றி பெற்றிருக்கும் எனக் கூறியிருந்தார். தொடர்ந்து, அவர்களை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தினார்.
இதையும் படிங்க: பூச்சாண்டி காட்டாதீங்க விஜய்! அந்த ஃபைல்களை நீ அவிழு, நானும் அவிழ்க்கிறேன்! ஆர்.எஸ். பாரதி சவால்!
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, தனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், உணர்ச்சிவசப்பட்டு பேசியது இயல்பானது என்றும் விளக்கம் அளித்தார்.

“செத்துப்போய்விடுவார்கள் என்று நான் சொல்லவில்லை. சாவே வராது என்றுதான் சொன்னேன். அவர்கள் நன்றாக இருக்க வேண்டும். இந்த ஆட்சியில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அவர்கள் முழுமையாக பார்க்க வேண்டும் என்பதுதான் அதன் பொருள்” என அவர் கூறினார்.
மேலும், சட்டசபையில் பேச வேண்டிய பல்வேறு பிரச்சினைகளை விட்டுவிட்டு தனது பேச்சை முதல்வர் விஜய் முன்னிலைப்படுத்தியதாகவும் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினார்.
ஆனால், பொதுமக்கள் குறித்து பயன்படுத்தப்பட்ட வார்த்தை எந்த நோக்கத்தில் கூறப்பட்டிருந்தாலும், அது அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால் ஆர்.எஸ்.பாரதியின் விளக்கம் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வருமா என்பது அரசியல் வட்டாரங்களில் கேள்வியாகியுள்ளது.
இதையும் படிங்க: ரஜினி, தனுஷ், சூர்யாவை குறிவைத்து சைபர் தாக்குதல்! முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்?! பரபரப்பு பின்னணி!