மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நெருங்கிய தோழியும், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான வி.கே. சசிகலா அவர்கள், கேரள மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தனது கட்சியின் முதல் வேட்பாளரை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அண்டை மாநிலமான கேரளாவிலும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தனது கட்சியின் முத்திரையைப் பதிக்கச் சின்னம்மா திட்டமிட்டுள்ளார்.
வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள கேரள மாநில சட்டமன்றப் பேரவைப் பொதுத்தேர்தலில், இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் தேவிகுளம் (தனி) தொகுதியில் தனது கட்சிப் போட்டியிடுவதாகச் சசிகலா அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

இத்தொகுதியில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு பெற்ற வேட்பாளராகத் திரு. செல்லத்துரை அவர்கள் களம் காண்கிறார். இத்தேர்தலில் செல்லத்துரை அவர்கள் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதைச் சசிகலா தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார். கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூடி விரிவாகப் பரிசீலித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் தாரக மந்திரத்தைச் சுட்டிக்காட்டி, அம்மாவின் வழியில் மக்கள் பணியாற்றுவதே தனது இலக்கு என்று சசிகலா குறிப்பிட்டுள்ளார். கேரளாவில் குறிப்பாகத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தமிழர்கள் அதிகம் உள்ள தேவிகுளம் தொகுதியில் அதிமுக-வின் வாக்கு வங்கியைத் தன் பக்கம் இழுக்கச் சசிகலா இந்த வியூகத்தை வகுத்துள்ளார்.
ஏற்கனவே தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-விற்கும், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், சசிகலாவின் இந்தத் தனித்த அரசியல் நகர்வு தென் மாநில அரசியலில் ஒரு புதிய திருப்பமாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: அரசியல் சதுரங்கம்! தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் - சசிகலா சந்திப்பு!