குஜராத்தின் அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 விமானம் 242 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்றது. இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டினர், 1 கனேடிய நாட்டினர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர். விமானம் வானில் பறக்கத் தொடங்கிய 3வது நிமிடத்திலேயே அகமதாபாத்தினுடைய மேக்காணி என்று சொல்லக்கூடிய நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

சுமார் 600 - 800 அடி உயரமே பறந்த விமானம், மருத்துவக் கல்லுாரி விடுதி மீது பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானதில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில், ஒரேயொரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
விமானம் விழுந்த கட்டடத்தில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் பலரும் உடல் கருகினர். இதனால், பலி எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது. காயம் அடைந்த பயணி உள்ளிட்டோர் அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அகமதாபாத் மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி, விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். மேலும் விமானத்தில் இருந்து குதித்து உயிர் தப்பிய ஒரே பயணி விஷ்வாஸ் குமாரிடமும் மோடி உடல் நலம் விசாரித்தார். அப்போது விபத்தில் இருந்து தாம் தப்பியது பற்றி விஷ்வாஸ் அவரிடம் கூறியுள்ளார். அதன் பின், அகமதாபாத் ஏர்போர்ட் சென்ற பிரதமர் மோடி, விமான விபத்து மற்றும் மீட்பு சீரமைப்பு பணிகள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்று அகமதாபாத் சென்ற பிரதமர் மோடி, விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர், விபத்து மற்றும் மீட்பு பணிகள் பற்றி பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்து, நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். மேலும் போட்டி தொடங்குவதற்கு முன் வீரர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.