ராஜஸ்தானைச் சேர்ந்த மாடல் மற்றும் வளர்ந்து வரும் நடிகை ஹர்ஷில் காலியா (30) திடீர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் ஜெய்ப்பூர் நகரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்து, பலரின் மனதையும் கலங்கச் செய்துள்ளது.
தனது வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஹர்ஷில், ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் உள்ள ஷிப்ரா பாத் சாலையில் காரை ஓட்டி வந்துகொண்டிருந்தார். அப்போது ஒரு வளைவு பகுதியில் கார் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்பை மோதி, அதிர்ச்சியளிக்கும் வகையில் தலைகீழாகக் கவிழ்ந்தது. மோதிய அதிர்ச்சி மற்றும் வேகத்தால் கார் நொறுங்கிய நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

விபத்து நேரத்தில் அருகிலிருந்த பொதுமக்கள், சத்தம் கேட்டு விரைந்து வந்து, கவிழ்ந்திருந்த காரை தூக்கி நிறுத்தி ஹர்ஷிலை வெளியே எடுத்து உதவியபோதும், அவர் பலத்த தலைக்காயங்களால் ரத்தக்குளத்தில் புழுங்கிக் கிடந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், வழியில் உயிரிழந்துவிட்டதாக மருத்தவர்கள் உறுதிப்படுத்தினர்.
இதையும் படிங்க: தனுஷின் ‘கர’ படத்தின் அடுத்த போஸ்டர் வெளியீடு..! நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவின் ‘பரதன்’ கதாபாத்திர பேன்ர் இதோ..!
இந்த சம்பவத்துக்கான சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் கார் மிக வேகமாக வந்து வளைவில் சரியான கட்டுப்பாட்டின்றி தடுப்பில் மோதுவது தெளிவாக பதிவாகியுள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணையில் அதிக வேகம் மற்றும் திடீர் ஸ்டியரிங் தவறுதலே விபத்துக்குக் காரணம் என போலீஸ் தெரிவித்துள்ளது. ஆனால், வாகனத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதா என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

30 வயதான ஹர்ஷில் காலியா, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ‘மிஸ் திவா ராஜஸ்தான்’ போட்டியில் முதல் ரன்னர் அப் பட்டத்தை வென்று பிரபலமானார். அதன் பின் பல விளம்பரங்கள், ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்று தன்னை மாடலிங் உலகில் நிலைநிறுத்திக் கொண்டார். டிஸ்னிப்பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான ‘க்ரைம் நெக்ஸ்ட் டோர்’ என்ற வெப் சீரிஸில் அவர் நடித்தது, அவருக்கு ரசிகர்கள் மத்தியில் தனிப்பட்ட பெயரை பெற்றுக்கொடுத்தது.
இளம் வயதிலேயே திறமையான நடிகையை இழந்த துயரம், அவரது குடும்பத்தாரையும் நண்பர்களையும் மட்டுமல்லாது முழு பொழுதுபோக்கு உலகையே உலுக்கியுள்ளது. பல பாலிவுட் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

போலீசார் இந்த விபத்துக்கு காரணமான சரியான காரணங்களைத் தனிவிவரமாக கண்டறிய விசாரணையை விரைவுபடுத்தி வருகின்றனர். திடீரென ஓய்ந்துபோன இன்னொரு இளம் நட்சத்திரத்தின் வாழ்க்கை, சாலை விபத்துகள் குறித்து மீண்டும் ஒரு முறை விழிப்புணர்வு தேவை என்பதை நினைவூட்டுகிறது.
இதையும் படிங்க: இயக்குநர் இல்லை… ஆனால் அவரது நோக்கம் உயிருடன் இருக்கும்..! ‘கெணத்த காணோம்’ வெற்றி விழாவில் யோகி பாபு உருக்கம்..!