கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022 பிப்ரவரியில் ரஷ்யா போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளை கடந்தும், இந்தப் போர் தொடர்கிறது. அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் அரசு, ரஷ்ய படைகளை எதிர்த்து வருகிறது.
சமீபத்தில் ரஷ்ய எல்லைக்குள் சென்று உக்ரைன் படையினர் நடத்திய தாக்குதலால், இரு நாடுகளுக்கும் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி செய்தும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.
பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் போர் நீடிக்கிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு எதிராக ஒரே இரவில் மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியது. இதில் 477 ட்ரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகள் உட்பட மொத்தம் 537 வான்வழி ஆயுதங்களை ரஷ்யா வீசியது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் காயமடைந்தனர். உக்ரைன் போர் விமானத்தின் விமானி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: திரும்பும் திசையெல்லாம் மரண ஓலம்.. உக்ரைன் மீது ரஷ்யா கொடூர தாக்குதல்.. 10 பேர் பரிதாப பலி..!

முன்னதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், நேற்று முன்தினம் கூறுகையில், துருக்கியில், உக்ரைனுடன் மீண்டும் பேச்சு நடத்த ரஷ்யா தயாராக உள்ளது என்றார். எனினும், உக்ரைன் மீது முன் எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய வான்வழி தாக்குதலை ரஷ்ய படையினர் அரங்கேற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "கிட்டத்தட்ட இரவு முழுக்க உக்ரைன் முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன . 477 ட்ரோன்கள் மற்றும் பல்வேறு வகையான 60 ஏவுகணைகள் ஏவப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை ரஷ்ய - ஈரானிய ஷாஹெட்கள். உக்ரைனில் உள்ள அனைத்தையும் ரஷ்யா குறிவைத்தது.

ஸ்மிலாவில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடமும் தாக்கப்பட்டது, இதில் ஒரு குழந்தை காயமடைந்தது. அவசர உதவிகள் தேவைப்படும் இடங்களில் மீட்புக் குழுக்கள் பணியாற்றி வருகின்றன.துரதிர்ஷ்டவசமாக, இந்த தாக்குதலை முறியடிக்கும் போது, எங்கள் எஃப்-16 விமானி மக்ஸிம் உஸ்டிமென்கோ உயிரிழந்தார். இன்று அவர் 7 வான்வழி ஏவுகணைகளை அழித்தார்.
அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல். அவரது மரணத்தின் அனைத்து சூழ்நிலைகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்று நான் அறிவுறுத்தியுள்ளேன். கடந்த வாரத்தில் மட்டும் 114-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், 1,270-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 1,100 கிளைடு குண்டுகளை ரஷ்யா வீசியுள்ளது என தெரிவித்திருந்தார்.

உக்ரைன் விமானப்படையின் செய்தித்தொடர்பாளர் யூரி இஹ்னாட் கூறுகையில், “ரஷ்ய படையினர் ஒரே நாளில், மிகப்பெரிய வான்வழி தாக்குதலை உக்ரைன் மீது தொடுத்துள்ளது. மேற்கு பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில், 475 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டன. எனவே, இத்தாக்குதலால், பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை,” என்றார்.
இதற்கிடையே, இத்தாக்குதலில் கெர்சன் மாகாணத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஆறு பேர் படுகாயமடைந்ததும் தெரியவந்துள்ளது. இதேபோல் லிவிவ் மாகாணத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், அங்குள்ள தொழிற்சாலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, அங்கு ஒரு பகுதி முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ரஷ்யாவின் திடீர் மிசைல் அட்டாக்.. 9 மாடி பில்டிங் நொறுங்கியதில் உக்ரைனில் 15 பேர் பலி..!