உணவு பதப்படுத்துதல் துறையில் பெரும் முதலீட்டு எழுச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (PLI) திட்டத்தின் கீழ், இந்தத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் 9,207 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளதாக மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் ரவ்நீத் சிங் தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த அவர், “PLI திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல் துறைக்கு வந்த விண்ணப்பங்களில் 168 விண்ணப்பங்கள் கடந்த டிசம்பர் 31 வரை அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் அந்தக் காலகட்டம் வரை மொத்தம் 9,207 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன” என்று கூறினார்.
இந்தத் திட்டத்தின் மூலம் 35 லட்சம் டன் அளவுக்கு உணவுப் பதப்படுத்துதல் மற்றும் சேமிப்பு திறன் உருவாக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் பயனாளி நிறுவனங்களுக்கு இதுவரை 2,714.79 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு..!! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!!
உலக அளவில் உணவு உற்பத்தியில் இந்தியாவை முன்னிலைப்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உணவு உற்பத்தி ஜாம்பவான்களை உருவாக்குவது, இந்திய உணவு பிராண்டுகளை உலக அளவில் பிரபலப்படுத்துவது, விவசாய நிலத்துக்கு வெளியே வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, விவசாயிகளுக்கு லாபகரமான விலை உறுதி செய்வது, அவர்களின் வருவாயை உயர்த்துவது ஆகியவை இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்.

உற்பத்தியில் தொடங்கி பதப்படுத்துதல் வரை அனைத்துப் படிகளும் இந்தியாவுக்குள் நடைபெற வேண்டும் என்பது திட்டத்தில் பயன் பெறுவதற்கான முக்கிய நிபந்தனை. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியும் ஏற்றுமதியும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட 168 நிறுவனங்களில் 69 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், 13 இயற்கை உணவுகள் தொடர்பானவை, 2 கூட்டுறவு சங்கங்கள், 2 புதுமையான உணவுப் பொருட்கள் தொடர்பானவை மற்றும் 82 பெரிய நிறுவனங்கள் அடங்கும்.
இந்த முதலீடு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் உணவு பதப்படுத்தும் தொழில்களை விரிவுபடுத்தவும், விவசாயிகளுக்கு நல்ல வருமானம் தரவும் உதவும் என்று அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. PLI திட்டம் இந்திய உணவுத் துறையை உலக அரங்கில் வலுப்படுத்தும் முக்கிய அடியாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கடுகடுக்கும் கரூர் மக்கள்! புறக்கணிக்க முடிவு? செந்தில்பாலாஜி கோவை தாவியதன் பின்னணி!