அதிமுகவில் தொடர்ந்து நீடிக்கும் உட்கட்சி அதிகாரப் போட்டி, கட்சியின் அடித்தளத்தை உலுக்கி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்காதது கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்திற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி, கட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் தற்போதைய அரசியல் நிலை, சட்டமன்றத்தில் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள், எதிரணியின் நகர்வுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், இந்த முக்கிய கூட்டத்திற்கு அதிமுகவின் 82 மாவட்டச் செயலாளர்களில் வெறும் 17 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுவரை எந்த அணியிலும் சேராமல் மௌனம் காத்து வருவது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் மாறிய மரபு! இபிஎஸ் முன்னிலையில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அவசரக் கூட்டம்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட அதிமுகவில், அதிகாரப் போட்டி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கும், சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அணிக்கும் இடையேயான மோதல் இப்போது வெளிப்படையான சண்டையாக மாறியுள்ளது. இந்தப் பிளவு கட்சித் தொண்டர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கட்சியின் ஒற்றுமைக்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்தாலும், இரு அணிகளும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. மாவட்டச் செயலாளர்கள் பெரும்பாலானோர் கூட்டத்தைப் புறக்கணித்திருப்பது, எடப்பாடி தரப்புக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
வரும் நாட்களில் அதிமுகவின் உட்கட்சி அரசியல் மேலும் சிக்கலான திருப்பங்களை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் உடனடியாக தலையிட்டு பிளவைத் தீர்க்க வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதிமுகவின் எதிர்காலம் இந்த அதிகார மோதலின் விளைவைப் பொறுத்தே அமையும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில் சிக்கல்!! வாய்விட்டு கெடுத்த லீமாரோஸ்! இழுபறி ஏன்?!